இலங்கை விளையாட்டில் நாமல் ராஜபக்ஷ எனும் புது அவதாரம்

375

கடந்த 1966ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த வீ.ஏ சுகததாச முதல் இன்று வரையான சுமார் 54 வருட காலப்பகுதியில் இலங்கையில் 18 விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பணியாற்றியுள்ளனர்.  

இதில் கடைசியாக பணியாற்றிய 6 விளையாட்டுத்துறை அமைச்சர்கள் 2015ஆம் ஆண்டு முதல் 2020 வரை நியமிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.  

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

நவீன உலகிற்கு பொருத்தமான தேசிய விளையாட்டு கொள்கைத் திட்டமொன்று இல்லாமல் ஐந்து வருடங்களில் 6 பேர் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக செயற்பட்டது இந்நாட்டின் விளையாட்டு சட்டம் மற்றும் அதன் கொள்கைகள் உள்ளிட்ட விடயங்கள் இன்றைய உலகிற்கு எந்தளவு தூரத்துக்கு பொருத்தமானது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றது

இதனிடையே, ஒரு றக்பி வீரராக, தேசிய றக்பி அணியின் தலைவராக, றக்பி பயிற்சியாளராக வலம்வந்த 34 வயதான நாமல் ராஜபக்ஷ, சுமார் 10 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக இருந்துவிட்டு முதல்தடவையாக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.   

அண்மையில் நிறைவுக்கு வந்த பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாமல் ராஜபக்ஷ இலங்கையின் புதிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நியமனம் பெற்றுக்கொண்டார்

இலங்கையின் சகல விளையாட்டையும் அபிவிருத்தி செய்வேன் – நாமல் ராஜபக்ஷ

அத்துடன், அவர் கடந்த 18ஆம் திகதி தனது கடமைகளை விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்

இதன்படி, இலங்கையின் 16ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற நாமல் ராஜபக்ஷ, இலங்கை வரலாற்றில் முதலாவது இளம் வயது விளையாட்டுத்துறை அமைச்சராக இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் மாணவரான நாமல் ராஜபக்ஷ, தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே ஒரு றக்பி வீரராக செயற்பட்டவர் என்பதுடன் அந்த அணியின் பிரதான அணியினை தலைமை தாங்கியும் இருந்தார்

பின்னர், கடந்த 2000ஆம் ஆண்டில் இலங்கை 16 வயதுக்குட்பட்ட றக்பி அணியினை தலைமை தாங்கிய நாமல் ராஜபக்ஷ, இலங்கை 19 வயதுக்குட்பட்ட றக்பி அணியினையும் வழிநடாத்தியிருக்கின்றார்

அரசியல் தலையீடு, ஊழல்கள் இன்றி விளையாட்டு இருக்க வேண்டும் – ஹரின்

பின்னர் இலங்கை கடற்படை றக்பி அணியின் தலைவராக செயற்பட்ட நாமல் ராஜபக்ஷ, கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை தேசிய றக்பி அணியின் தலைவராகவும் கடமையாற்றியதுடன், றக்பி பயிற்சியாளராகவும் செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,  

”ஒரு விளையாட்டு வீரராக என்னை இந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமித்ததற்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலானோர் கிரிக்கெட் விளையாட்டை பற்றி தான் அதிகம் பேசுகின்றார்கள். ஆனால், நான் கிரிக்கெட் அமைச்சர் அல்ல என்பதை முதலில் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். எனவே, என்னை இந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவே ஜனாதிபதி நியமித்துள்ளார்

இந்த நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுக்களின் பிரதிநிதியாகக் தான் நான் செயற்படவுள்ளேன். இதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு என்று தனியாக ஒரு நிர்வாகம் உள்ளது

எனினும், எதிர்காலத்தில் சிரேஷ் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரோடும் பேச்சுவார்த்தை நடத்தி கிரிக்கெட் விளையாட்டை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன்

அத்துடன், இலங்கையில் உள்ள ஏனைய விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 

பேச்சுவார்த்தை நடத்தி, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பின்தங்கிய கிராமங்களில் உள்ள வீரர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்

முன்னதாக, 2010 மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தின் போதும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய நாமல் ராஜபக்ஷவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் அந்த எதிர்பார்ப்பும் பொய்யானது

தேசிய விளையாட்டு பேரவைக்கு சங்கா, மஹேலவுக்கு அழைப்பு

இந்த நிலையில், றக்பி விளையாட்டில் தேர்ச்சி பெற்றவராக வலம்வந்த நாமல் ராஜபக்ஷ தற்போது இலங்கை அரசியலில் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக வலம்வருகின்ற ஒருவராக விளங்கியதால் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை உண்மையில் பாராட்டத்தக்க விடயமாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது

அதிலும் குறிப்பாக, இந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியானது நிதி அமைச்சை விட மிகவும் பாரதூரமான பொறுப்பாகும். அதற்கு கடந்த 5 வருடங்களில் பொறுப்பேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர்கள் முகங்கொடுத்த சம்பவங்கள் சிறந்த உதாரணமாகும்.

இதில் இலங்கையின் 15ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பைஸர் முஸ்தபா ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடுகையில்

”நான் பல அமைச்சுக்களில் கடமையாற்றியுள்ளேன். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சைப் போன்றதொரு அமைச்சை எனது வாழ்க்கையில் பார்த்தது கிடையாது. கதிரையில் உட்கார்ந்தவுடன் சங்கங்களுக்குள் காணப்படுகின்ற சண்டைகள், முறைப்பாடுகள் தான் முதலில் வரும். அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதில் நிறைய காலம் சென்றுவிடும்” என தெரிவித்தார்

இலங்கை தொடரில் விளையாடுவாரா சகிப் அல் ஹசன்?

இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதென்பது இலகுவான விடயமல்ல என்பதை அவரது உரையிலிருந்து அறிந்து கொள்ள முடியும்

விளையாட்டு என்றவுடன் ஒற்றுமை தான் முதன்மை விடயமாக பார்க்கப்படும். அதேபோல, வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்கின்ற மனப்பாங்கும் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பெரும்பாலான விளையாட்டுகளில் இந்த நிலையை காணமுடியாமல் உள்ளது

இதனால் பல விளையாட்டுக்கள் அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டு இருப்பதாக விளையாட்டுத்துறையில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையில் சுமார் 61 விளையாட்டு சங்கங்கள் காணப்படுகின்றன. அதில் பெயரளவில் மாத்திரம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சங்கங்களை இரத்து செய்வதற்கு விளையாட்டுத்துறை அவதானம் செலுத்தியுள்ளது

Video – இலங்கை டெஸ்ட் அணியில் பானுகவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?? | Cricket Kalam 45

அதிலும் குறிப்பாக, பெரும்பாலான சங்கங்கள் உறுப்பினர்களுக்கு இடையில் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக நிர்வாக சபைத் தேர்தலை நடத்தாமல் இயங்கிக் கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.  

இதில் பெரும்பாலான சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்ற தடை உத்தரவும், ஒருசில சங்கங்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக இலங்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல விளையாட்டுக்கள் அபிவிருத்தி அடையாமல் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

எனவே, இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றுகின்றவருக்கு நாட்டின் விளையாட்டை அபிவிருத்தி செய்வதைக் காட்டிலும் இந்த சங்கங்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் முக்கிய பணியாக மாறிவிட்டது.

இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டுக்கு ஒரு கோடி ரூபா அனுசரணை

இதற்கு கடந்த காலங்களில் குறித்த பதவிக்கு வந்த அமைச்சர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட சம்பவங்களை அடுக்கடுக்காய் எடுத்துக் கூறலாம். எனவே புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நாமல் ராஜபக்ஷவும் இந்த நிலைமைக்கு நிச்சயம் முகங்கொடுப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது

இதனால் தன்னுடைய கதிரையில் உட்காருவதற்கு முன், தனக்கு முன்னால் உள்ள விளையாட்டு சங்கங்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து வைத்துக் கொள்வது அவருக்கு கடமைகளை இலகுவாக செய்வதற்கு வழி அமைக்கும்

பொதுவாக ஒவ்வொரு வருடமும் திறைசேறி உண்டியலில் இருந்து குறிப்பிட்டதொரு நிதி விளையாட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்றது.

எனினும், விளையாட்டுத்துறை உள்ள அதிகாரிகளுக்கிடையில் காணப்படுகின்ற முறுகல் நிலையால் அந்த நிதி கடந்த காலங்களில் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றரில் இலங்கை சாதனை படைத்த ஹிருனி

கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்லுக்குப் பின் பொறுப்பேற்ற இலங்கையின் இடைக்கால அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும பொறுப்பேற்றுக் கொண்டாலும், அவரால் அந்தக் காலப்பகுதியில் பெரியளவில் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் போனது

இதற்கு கடந்த மார்ச் முதல் இலங்கையில் தலைதூக்கிய கொவிட் – 19 வைரஸும் முக்கிய காரணமாக இருந்தது. இதில் குறிப்பாக, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இறுதியாக விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட ஹரீன் பெர்னாண்டோ, தனது பதவியை பொறுப்பேற்ற பிறகு இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

”திறைசேறி உண்டியலில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபா நிதியை விளையாட்டின் அபிவிருத்திக்காக உரிய முறையில் பயன்படுத்தாத காரணத்தினால் அந்த நிதியை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்து” என அவர் தெரிவித்தார்

எனவே, இந்நாட்டில் அப்பாவி வீரர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதியை இல்லாமல் செய்வதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி தற்போது பேசி எந்தப் பயனும் கிடையாது.

Video – உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய Anjelo & Bhanuka |Sports RoundUp – Epi 128

அதிலும் குறிப்பாக, 2016 முதல் 2018 வரை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகரவின் காலப்பகுதியில் வீரர்களின் பயன்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் டொரின்டனில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்குத் சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்துக்கு அருகே இரண்டு கொள்கலன்களில் மூடி வைக்கப்பட்டன

இவ்வாறு பல வருடங்களாக கரைபிடித்துக் கொண்டிருந்த உபகரணங்களை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபா ஊடகவியலாளர்ளை அழைத்துச் சென்று காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்

எனவே, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏற்கனவே மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட இலங்கையின் விளையாட்டுத்துறையானது இந்த வைரஸினால் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இதனால் புதிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தலைக்கு மேல் நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். இதனை சரி செய்வதற்கு அவருடைய புதிய திட்டங்களும், விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வியூகங்களும் தான் கைகொடுக்கும்

இலங்கை மெய்வல்லுனர்களை பயிற்றுவிக்க வரும் பின்லாந்து பயிற்சியாளர்

இலங்கையைப் பொறுத்தமட்டில் கிரிக்கெட், கால்பந்து, றக்பி, கோல்ப், படகோட்டம், மோட்டார் கார், டென்னிஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சங்கங்கள் அனுசரணையாளர்களின் உதவியினால் எந்தவொரு பிரச்சினைகளும் இன்றி சிறந்த முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

அதிலும் குறிப்பாக கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அந்த சங்கங்கள் தமது வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கவனித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எதுஎவ்வாறாயினும், எஞ்சிய சங்கங்கள் அனைத்தும் கொவிட் – 19 வைரஸ் காரணமாக மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

எனவே, புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்ற பிறகு நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களையும் ஒரு இடத்துக்கு அழைத்து ஒரு சம்மேளனத்தை நடத்துவது மிகவும் சிறந்த விடயமாகப் பார்க்கப்படுகின்றது

SLC Level 2 பயிற்சியை நிறைவு செய்த சுரேஷ் மோகன், லவேந்திரா

அதன்போது கொவிட் – 19 வைரஸ் காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள விளையாட்டுக்களை இனங்கண்டு அந்த வீரர்களையும், சங்கங்கத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிப்பது தான் காலத்தின் தேவையாக உள்ளது.

அத்துடன், 3இல் 2 பெரும்பாண்மையுடன் இந்நாட்டில் ஆட்சியை அமைத்துள்ள இந்த அரசாங்கமானது விளையாட்டின் எதிர்காலத்திலும் சிறந்த திட்டமொன்றையும் முன்வைக்க வேண்டும் என்பது தான் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்

அதேபோல, கடந்த 5 வருடங்களில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள், நிதி ஒதுக்கீடு, வெளிநாட்டு சுற்றுலாக்கள், அநாவசிய செலவுகள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்கு விசேட குழுக்களை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அத்துடன், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் 40 மில்லியன் ரூபா நிதி முறைகேட்டை விசாரிப்பது உள்ளிட்ட அனைத்து சங்கங்களிலும் உள்ள குளறுபடிகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

குறிப்பாக, கால்பந்தாட்ட சம்மேளனத்தில் 40 மில்லியன் ரூபா நிதி முறைகேடு இடம்பெற்றமை கண்டறியப்பட்டு சுமார் 3 வருடங்கள் ஆகின்றபோதும், அதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.  

Photos: Hon. Namal Rajapaksa assuming duties as the Minister of Youth Affairs and Sports

இலங்கை கால்பந்தின் வளர்ச்சிக்காக இந்த பெரும் தொகை முறைகேடு செய்யப்பட்டமை இலங்கை விளையாட்டு துறையில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழலாகவே பார்க்கப்படுகின்றமையினால், இவை குறித்து ஆழமான, முழுமையான விசாரணை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். 

மறுபுறத்தில், யுத்தத்திற்குப் பிறகு கவனிப்பாரற்று காணப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறிப்பாக, மெய்வல்லுனர், கால்பந்து, கிரிக்கெட், கபடி, குத்துச்சண்டை, பளுதூக்கல் உள்ளிட்ட போட்டிகளில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் குறித்த மாகாணங்களைச் சேர்ந்த வீரர்கள் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும், எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி தேசிய மட்டத்தில் பல வெற்றிகளையீட்டி வருகின்ற அந்தப் பகுதியில் உள்ள வீரர்களுக்கு அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்திக் கொடுப்பது புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது

அதுமாத்திரமின்றி, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுமிடத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுக்கு வரவுசெலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்ற நிதி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இது குறித்தும் கவனம் செலுத்துவது அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் பெரும் வாய்ப்பாக அமையும். 

குமார் சங்கக்காரவுக்கு விருப்பமான துடுப்பாட்ட வீரர்கள்

விளையாட்டுத்துறை அமைச்சராக கோலை எடுத்துக்கொண்டு 100 மீற்றர் ஓடுவதைப் போல ஓட்டத்தை ஆரம்பிக்காமல், மெதுவாக நீண்ட தூரம் ஓடுகின்ற திறமை நாமல் ராஜபக்ஷவிடம் நிறையவே உள்ளது.  

எனவே, இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு செயற்படவுள்ள நாமல் ராஜபக்ஷ, இலங்கையின் விளையாட்டுத்துறையில் உள்ள சவால்களையெல்லாம் வென்று, விளையாட்டில் சாதிக்கின்ற வீரர்களையும், விளையாட்டின் மூலம் பணம் உழைக்கின்ற ஒரு நாடாக இலங்கையையும் மாற்ற வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் விபரம் 

1972 முதல் 1976 வரை கே.பி ரன்நாயக்க
1978 முதல் 1988 வரை எம். வின்சன்ட் பெரேரா
1989 முதல் 1993 வரை சீ. நன்த மெதிவ்
1994 முதல் 2000 வரை எஸ்.பீ திஸாநாயக்க
2001 லக்ஷமன் கிரியெல்ல 
2002 முதல் 2003 வரை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ
2004 முதல் 2006 வரை ஜீவன் குமாரதுங்க 
2007 முதல் 2008 வரை காமிீனி லொக்குகே
2009  ஆர்.எம்.சீ.பி ரத்னாயக்க
2010 முதல் 2014 வரை மஹிந்தானந்த அளுத்கமகே
2015 நவீன் திஸாநாயக்க
2016 முதல் 2018 வரை தயாசிறி ஜயசேகர
2018 பைசர் முஸ்தபா
2019 ஹரீன் பெர்னாண்டோ
2020 டலஸ் அழகப்பெரும

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<