இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான சனத் ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் (High Performance Centre) ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளராக ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ தொடர்ந்து நீடிப்பு<<
அந்தவகையில் சனத் ஜயசூரிய இந்த மாத இறுதியில் இருந்து தனது பதவியினை இராஜினமா செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை கிரிக்கெட்டின் புதிய நிர்வாகக் குழுவிற்கு (Cricket Transformation Committee) அனுப்பியுள்ள கடிதத்தில் ஜயசூரிய உயர் செயற்திறன் மையத்திற்கான தனது நியமனம் மற்றும் மாத்தறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி ஆகிய இரு பொறுப்புக்களையும் அவர் வகிப்பது முரண்பாட்டினை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இதனை ஒரு காரணமாக கருத்திற் கொண்டே அவர் பதவி விலகுவதாக கூறப்பட்டிருக்கின்றது.
தேசிய அணி ஒரு சவாலான காலப்பகுதியை எதிர்கொண்டிருந்த வேளையில், இலங்கை கிரிக்கெட்டிற்கு உதவுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும், வேலைவாய்ப்பு ஒன்றினை பெற்றுக் கொள்ளும் தேவை நோக்கத்தில் இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
>>கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு<<
மாத்தறை மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வந்த ஒரு வீரர் என்ற ரீதியில், அங்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவது தனக்கு மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியுள்ள சனத் ஜயசூரிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அடிமட்ட அளவில் இருந்து இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் இந்த இரண்டு பொறுப்புகளும் ஒன்றோடொன்று முரண்படுவதாக தான் கருதவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இருப்பினும், புதிய நிர்வாகத்தின் உறுப்பினர்கள் இந்த இரண்டு பதவிகளும் ஒன்றிற்குக்கொன்று பொருந்தாதவை என கருதினால், நிர்வாக அமைப்பிற்குள் மற்றொரு உத்தியோகபூர்வ பதவியில் நீடிப்பதை விட மாத்தறை கிரிக்கெட் வளர்ச்சிக்கு தொடர்ந்து சேவை செய்வதையே தான் விரும்புவதாக ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய நிர்வாகத்தின் பணிகளுக்கு தான் ஒரு இடையூறாக இருக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் அதன் பொற்காலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இந்த கிரிக்கெட் மாற்றுக்குழு வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
>>இலங்கை வரும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி<<
மேலும், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் (SLC) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் தான் வழங்கும் ஆதரவு, உத்தியோகபூர்வ பதவி ஒன்றை வகிப்பதில் மட்டும் தங்கியிருக்காது என்பதை ஜயசூரிய சுட்டிக் காட்டியிருப்பதோடு, நிர்வாகக் கட்டமைப்புக்கு வெளியிலிருந்தும் கூட தான் தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளித்து, அதன் முன்னேற்றத்திற்கு பங்களிப்பேன் என்றும் அவர் உறுதி வழங்கியிருக்கின்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















