சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிச) தலைவர் ஜெய் ஷா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் நேற்று (19) கொழும்பிற்கு மேற்கொண்ட குறுகிய விஜயத்தின் போது, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
நிர்வாகக் கட்டமைப்பு மாற்ற செயல்முறையை மேற்பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் தற்போதைய கிரிக்கெட் நிர்வாக நிலை குறித்து இந்தச் சந்திப்பில் சுமுகமான முறையிலும் ஆக்கப்பூர்வமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, கிரிக்கெட் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், சீர்திருத்த செயல்முறைகளை முன்னெடுப்பதற்கும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான விளக்கத்தை ஐசிசி தலைவர் மற்றும் பிசிசிஐ செயலாளருக்கு இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு வழங்கியது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் நல்லாட்சியை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்தும் ஐசிசி இன் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது. முக்கியமாக, இந்தச் சீர்திருத்த செயல்முறைகளை நிறைவு செய்வதற்கான தோராயமான காலக்கெடு மற்றும் உரிய சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு இணங்க, முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நிர்வாகத்திடம் பொறுப்புகளை மீண்டும் ஒப்படைப்பது குறித்தான விபரங்களையும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு பகிர்ந்து கொண்டது.
- இலங்கை கிரிக்கெட் புதிய இடைக்கால நிர்வாகத்தில் குமார் சங்கக்கார
- புதிய தெரிவுக் குழுவினைப் பெறும் இலங்கை கிரிக்கெட்
- SLC உயர் செயற்திறன் நிலைய பதவியில் இருந்து விலகும் சனத் ஜயசூரிய
இதுவரை எட்டப்பட்டுள்ள இலக்குகள் மற்றும் வெளிப்படையான முறையில் அதிகார மாற்றத்தை மேற்கொள்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஐசிசி தூதுக்குழுவிற்கு விவரிக்கப்பட்டது. இந்த விளக்கங்களை வரவேற்ற ஐசிசி தலைவர், உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் சபைகளில் வலுவான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் ஐசிசி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கொழும்பிற்கு வருகை தந்து, இலங்கையின் கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் எதிர்கால நகர்வுகள் குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதற்காக ஜெய் ஷா மற்றும் தேவஜித் சைகியா ஆகியோருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இந்தச் சந்திப்பு, கிரிக்கெட் மேம்பாடு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கை கிரிக்கெட், ஐசிசி, பிசிசிஐ ஆகியவற்றிற்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















