சினெத்தின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு வெற்றி

West Indies Emerging Team tour of Sri Lanka 2026

31
West Indies Emerging Team tour of Sri Lanka 2026

சினெத் ஜயவர்தன விளாசிய அதிரடிச் சதத்தின் உதவியோடு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சிக அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வளர்ந்து வரும் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று (24) நடைபெற்ற இப்போட்டியின் வெற்றி மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்ய இலங்கை வீரர்களால் முடிந்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சிக அணியின் தலைவர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 360 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணியின் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சினெத் ஜயவர்தன திகழ்ந்தார். அவர் 63 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு, 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கலாக 118 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்குப் பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய விஷேன் ஹலம்பகே 45 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார். இவர்கள் இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 164 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர்.

இவர்களைத் தவிர, அணித்தலைவர் நிபுன் தனஞ்சய 66 பந்துகளில் 55 ஓட்டங்களையும், ரனேஷ் சில்வா 60 பந்துகளில் 46 ஓட்டங்கள் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜீஷான் மோதாரா மற்றும் ஜெடியா பிளேட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நாதன் எட்வர்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

361 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய எதிரணியினர், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக கெவ்லோன் ஆண்டர்சன் 68 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மிஹிரங்க சில்வா 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அக்மால் ஃபஸ்லி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கவிஜ கமகே 2 விக்கெட்டுகளையும், சாமிக்க ஹீனடிகல மற்றும் ட்ரெவின் மெதிவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி, 26ஆம் திகதி (நாளை) கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<