இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) புதிய இடைக்கால நிர்வாகக் குழு முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தலைமையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>ருமேஷ் தரங்கவிற்கு இலங்கை கிரிக்கெட்டினால் ஒரு கோடி ரூபா நிதி உதவி<<
ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நேற்று (28) பதவி விலகியதனைத் தொடர்ந்தே, இலங்கை கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகம் எரான் விக்ரமரட்னவின் தலைமையில் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது.
ஷம்மி சில்வா கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத் தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் தன்னுடைய பதவிக்காலத்தை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் புதிய இடைக்கால நிர்வாகக் குழுவில் இலங்கை கிரிக்கெட்டின் முன்னணி ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, ரொஷான் மஹநாம மற்றும் சிதார்த் வெத்திமுனி ஆகியோரும் இணைக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாகக் குழுவானது, இலங்கை கிரிக்கெட்டில் ஏற்படவிருக்கும் சீர்திருத்தங்களை மேலாண்மை செய்ய இருப்பதனால் அந்த குழுவினை ”கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு” என அழைப்பதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டிருக்கின்றார்.
புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
- எரான் விக்ரமரட்ன (தலைவர்)
- ரொஷான் மஹாநாம
- குமார் சங்கக்கார
- துஷிர ரதேல்ல
- டினால் பிலிப்ஸ்
- சிதார்த் வெத்திமுனி
- அவன்தி கொலம்பகே
- பிரகாஷ் ஷாப்டர்
- உபுல் குமாரப்பெரும
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















