கொழும்பில் விமர்சையாகக் கொண்டாடப்பட்ட ‘உலக ஒலிம்பிக் தினம் 2026’

27
olympic day

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு, 2026 ஆம் ஆண்டுக்கான உலக ஒலிம்பிக் தினத்தை நேற்றுமுன்தினம் (23) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடியது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு, ஒற்றுமை மற்றும் ஒலிம்பிக் பண்புகளை பறைசாற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

நவீன ஒலிம்பிக் போட்டிகளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டு, 1894 ஜூன் 23 ஆம் திகதி சர்வதேச ஒலிம்பிக் குழு தோற்றுவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. 1948 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நாள், தற்போது உலகளாவிய ரீதியில் உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் நட்பு, மரியாதை போன்ற உன்னத விழுமியங்களை ஊக்குவிக்கும் ஒரு பெரும் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

“Let’s Move 2026” (ஒன்றாக நகர்வோம் 2026) என்ற தொனிப்பொருளின் கீழ், ‘உங்களால் இதைச் செய்ய முடியும்!’ (You Can Do This!) என்ற உத்வேகம் தரும் செய்தியை இவ்வருட ஒலிம்பிக் தினம் வழங்கியது. ஆரம்பத்தில் ஏற்படும் தயக்கங்களோ அல்லது சுய சந்தேகங்களோ விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதற்கு எவருக்கும் தடையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, குறிப்பாக இளைஞர்களை சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு வழிநடத்துவதே இதன் நோக்கமாகும்.

இதன்படி, எதிர்கால சந்ததியினரிடையே சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில், கொழும்பின் 7 முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த ஒலிம்பிக் தினக் கொண்டாட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

>>Photos – Olympic Day Celebration 2026<<

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முறை ஒலிம்பிக் தினக் கொண்டாட்டம், சுதந்திர சதுக்கத்தில் அடையாள ஒலிம்பிக் தின நடைபவனியுடன் ஆரம்பமாகி, பின்னர் உத்தியோகபூர்வ அமர்வுடன் தொடர்ந்தது. இதில் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், முக்கிய பங்குதாரர்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், இலங்கையின் ஒலிம்பிக் சாதனையாளர்கள் பலர் இந்த நடைபவனியில் பங்கேற்று, ஒலிம்பிக் சுடரை பெருமையுடன் ஏந்திச் சென்றனர். இதில் இலங்கையின் வாழும் ஒரே ஒலிம்பிக் பதக்க வெற்றியாளரான சுசந்திகா ஜயசிங்க, நிலுக கருணாரத்ன, சாமர தர்மவர்தன, கைல் அபேசிங்க மற்றும் விரேன் நெத்தசிங்க ஆகிய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்;நிகழ்வின் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கமோஷிடா நவோகி ஆகியோர் சிறப்பித்தனர்.

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அசங்க செனவிரத்ன மற்றும் பொதுச் செயலாளர் ரிஃப்டி ஃபஹ்மி ஆகியோரின் தலைமையின் கீழ், அதன் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த விழா ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<