ஒரேயொரு பதக்கத்துடன் நாடு திரும்பிய இலங்கைக்கு என்ன நடந்தது?

267

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இம்முறை போட்டிகளில் ஆசியாவின் முன்னணி நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய பஹ்ரைன் அணி, 11 தங்கம் 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 22 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியது.  

43 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 வீரர்களின் பங்குபற்றலுடன் நான்கு நாட்களாக கட்டாரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்  போட்டித் தொடரில் 15 வீரர்களுடன் களமிறங்கிய இலங்கை அணி ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை மாத்திரம் வெற்றிகொண்டு பதக்கப் பட்டியலில் 17ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட 23 வயதுடைய விதூஷா லக்ஷானி வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கான ஒரேயொரு பதக்கதை பெற்றுக்கொடுத்தார்.   

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு கொழும்பில் கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்த விதூஷா லக்ஷானி, ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான அடைவுமட்டத்தினை பூர்த்தி செய்யாவிட்டாலும், கடந்த கால திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

எனினும், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பதக்கங்களை வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒருசில முக்கியமான வீரர்கள் தமது தனிப்பட்ட அடைவுமட்டத்தினைக் கூட எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தனர். எனினும், இம்முறை பங்குபற்றியிருந்த 15 வீரர்களில் 6 பேரைத் தவிர ஏனைய அனைவரும் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை சிறப்பம்சமாகும்.  

இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக இருந்த பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் தலைவியும், 2017இல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றவருமான நிமாலி லியனாராச்சி ஏழாவது இடத்தையும், கயன்திகா அபேரத்ன நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

இதனிடையே, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு 3 நாட்களுக்கு முன் கட்டார் சென்றிருந்த ஹிமாஷ ஷான், ஆண்களுக்கான 100 மீற்றரில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி இருந்தார். எனினும், அவருக்கு ஒட்டுமொத்த வீரர்களில் 16ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோல, இறுதி நேரத்தில் பங்குபற்றுவதாக அறிவித்த ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இருந்தும் அவர் விலகிக் கொண்டார்.

அத்துடன், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நதீஷா ராமநாயக்க, ஆறாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். அதேபோல, ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய அஜித் பிரேமகுமார, நான்காவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார்.

மேலும், ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட ருசிறு சத்துரங்க ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, ஆண்களுக்கான 1500 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீரரான ஹேமன்த குமார 11ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், மைதான நிகழ்ச்சிகளான ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட கிரேஷன் தனன்ஞய நான்காவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சுமேத  ரணசிங்க, எட்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

இதனிடையே, ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர்களான தனுஷ் பிரியரத்ன மற்றும் ஜானக்க பிரசாத் விமலசிறி ஆகியோர் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.  

20 வருட சாதனை முறியடிப்பு

பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணி, 3 நிமிடங்கள் 35.04 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய இலங்கை சாதனையுடன் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

குறித்த போட்டியில் வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பை ஒருசில விநாடிகளினால் தவறவிட்ட இலங்கை அஞ்சலோட்ட அணி, பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்டத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு தேசிய சாதனையையும் படைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இளம் வீராங்கனைகளான நதீஷா ராமநாயக்க மற்றும் டில்ஷி குமாரசிங்க ஆகியோரது பங்குபற்றலுடன் களமிறங்கிய இலங்கை அஞ்சலோட்ட அணி, முன்னதாக 1999ஆம் ஆண்டு நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தமயந்தி தர்ஷா உள்ளிட்ட 4x400 அஞ்சலோட்ட அணியினால் (3 நிமிடங்களும் 35.42 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 வருடங்களின் பின் மகளிர் அஞ்சலோட்டத்தில் சாதனை படைத்த இலங்கை அணி

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

பதக்கத்தை தவறவிட்ட நிலானி

இலங்கை அணியின் மற்றுமொரு பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை நிலானி ரத்னாயக்க, எதிர்பாராத விதமாக பதக்கம் பெறும் வாய்ப்பை இறுதித் தருவாயில் தவறவிட்டார்.

குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கமொன்றை பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பு நிலானிக்கு காணப்பட்ட போதிலும், போட்டியின் இறுதி 50 மீற்றரில் கால் தடுக்கி கீழே விழுந்த காரணத்தால் அந்த பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.

தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தனியொரு வீராங்கனையாக தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலானி, மூன்று தடவைகள் தேசிய சாதனையை முறியடித்தார்.

ஆசிய மெய்வல்லுனரில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட நிலானி

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

அத்துடன், பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியை ஐந்து தடவைகள் 10 நிமிடங்களுக்குள் ஓடிமுடித்த அவர், தனது வாழ்நாளில் மூன்றாவது தடவையாக இவ்வாறு அதிகளவு வீராங்கனைகளுடன் போட்டியிட்டும் இருந்தார்.

2017இல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் போது போட்டியை இடைநடுவில் நிறுத்திக் கொண்ட அவர், கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அதிக போட்டித் தன்மை

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 15 ஆசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, உலக மெய்வல்லுனர் சாதனையை 9 வீரர்கள் நெருங்கியிருறந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமின்றி, இம்முறை ஆசிய மெய்வல்லுனரில் முன்னணி ஆசிய நாடுளுக்குக்கூட ஒற்றை பதக்கத்தையேனும் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஒரேயோரு செயற்கை ஓடுபாதையைக் கொண்ட இலங்கை சார்பாக இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய 15 வீரர்களில் 9 பேர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமையே இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மெய்வல்லுனர் வீரர்களுக்கு குடியுரிமை வழங்கி அண்மைக்காலமாக ஆசிய மெய்வல்லுனர் அரங்கில் முன்னணி நாடாக வலம்வந்து கொண்டிருக்கின்ற போட்டிகளை நடாத்திய கட்டார் 2 தங்கப் பதக்கங்களை மாத்திரம் வெற்றிகொண்டு 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 74

நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்து தலைமைப்… 

இலங்கைக்கு ஏன் பின்னடைவு?

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை வென்று ஏமாற்றம் கொடுத்திருந்தாலும், இலங்கையின் இந்த பின்னடைவுக்கான காரணத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்.

இம்முறை போட்டிகளில் ஆசியாவைச் சேர்ந்த முன்னணி மெய்வல்லுனர் வீரர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றியிருந்தனர். அதிலும் குறிப்பாக, ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகின்ற நட்சத்திர வீரர்களும் தங்களுக்கிடையில் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர். இதனால் கடந்த காலங்களைப் போன்றல்லாது இம்முறை போட்டிகள் விறுவிறுப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது.

மெய்வல்லுனர் போட்டிகளுக்காக உலகில் நிர்மானிக்கப்பட்டுள்ள விளையாட்டரங்குகளில் முதன்மையான ஒன்றாக விளங்குகின்ற டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கானது, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஒரு மைதானமாக காணப்படுகின்றது.  

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 74

நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்து தலைமைப்…

கட்டாரில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அது இருந்தாலும், இலங்கை வீரர்களின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மெண்டோ என அழைக்கப்படுகின்ற ஓடு பாதையில் எமது வீரர்கள் முதற்தடவையாகப் போட்டியிட்டதால் அவர்களது அடைவுமட்டத்தினைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் போயிருக்கலாம்.  

அதேபோல, எமது வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்பதால் இவ்வாறான போட்டித் தன்மை மிக்க சர்வதேச மட்டப் போட்டியில் வெற்றிகளை பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும்.

உதாரணமாக, பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்ட நிலானி ரத்னாயக்க, வருடமொன்றுக்கு ஒரேயொரு சர்வதேசப் போட்டியில் மாத்திரம் பங்குபற்றுகின்றார். இதில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் அதீத திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி பதக்கமொன்றை வெல்வது என்பது சாத்தியமற்ற விடயம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே அவ்வாறான வீரர்களுக்கு அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கைககள் எடுத்தால் மாத்திரமே குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கத்தையாவது எதிர்பார்க்க முடியும்.

அதேபோல, 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவுக்குப் பிறகுதான் பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி களமிறங்கியது. அத்துடன், இம்முறை அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய நான்கு வீராங்கனைகளும் தேசிய மட்டப் போட்டியில் ஒன்றாக ஓடியிருக்காவிட்டாலும் 20 வருடங்கள் பழைமை வாய்ந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தனர்.

நாட்டின் சகல விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு…

இலங்கை இராணுவத்தின் புண்ணியத்தால் இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு இன்று தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது. இன, மத, மொழி வேறுபடின்றி நாட்டிலுள்ள அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கி, சம்பளத்தையும் கொடுக்கின்ற இலங்கை இராணுவத்தைப் பாராட்டியாக வேண்டும்.  

இதேநேரம், 2016 தெற்காசிய விளையாட்டு விழாவுக்குப் பிறகு இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களுக்காக விசேட கொடுப்பனவு முறையொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்து வந்துது. இதன்காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல இளம் நட்சத்திர வீரர்கள் சர்வதேச மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அந்த கொடுப்பனவு இடைநிறுத்தி வைக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தின் பங்களிப்பு மட்டும் போதுமா?

இந்த நாட்டின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு இலங்கை இராணுவம் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றது என்றால் மிகையாகாது. பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை இனங்கண்டு ஒரு சாதாரண இராணுவ வீரருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து வரப்பிரசாதங்களையும் அவர்களுக்கு வழங்கி மெய்வல்லுனர் விளையாட்டிற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது.

ஒரு இராணுவ வீரரின் சேவை எப்போதும் நாட்டைப் பாதுகாப்பதாகும். ஆனால் யுத்தம் நிறைவடைந்த பிறகு இவ்வாறு மெய்வல்லுனர் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை இன, மத, மொழி வேறுபாடின்றி இலங்கை இராணுவம் தம்முடன் இணைத்துக் கொண்டு அவர்களுக்கான அனைத்துவிதமான பயிற்சிகள், போஷாக்கு உணவுகள் என்பவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கி, மாதாந்தம் சம்பளத்தையும் கொடுத்து வருகின்றது.

இலங்கை மெய்வல்லுனர்களுக்கு இராணுவத்தால் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் ஹரீன்

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு…

இந்த நாட்டின் மெய்வல்லுனர் விளையாட்டிற்கு இவ்வாறானதொரு அபரிமிதமான சேவையினை வழங்கி வருகின்ற இலங்கை இராணுவத்தினால் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கான அனைத்துவிதமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் உள்ளது. இதற்கு மெய்வல்லுனர் விளையாட்டிற்கான போதியளவு அடிப்படை வசதிகள் இல்லாமையா? அல்லது வீரர்களின் திறமையில் காணப்படுகின்ற பிழையா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கண் துடைப்பாகும் ஒலிம்பிக் கனவு

ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களை மாத்திரமே வெற்றி கொண்டுள்ளது. இந்த இரண்டு பதக்கங்களும் மெய்வல்லுனர் விளையாட்டில் கிடைக்கப் பெற்றமையே. 1948 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் டன்கன் வைட்டும், 2000ஆம் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றரில் சுசந்திகா ஜயசிங்கவும் இவ்வாறு பதக்கங்களை சுவீகரித்தனர்.

அதன்பிறகு சுமார் 2 தசாப்தங்களாக இலங்கையால் எந்தவொரு ஒலிம்பிக் பதக்கத்தையேனும் வெற்றி கொள்ள முடியவில்லை.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற ஒலிம்பிக் விழாவுக்கான முன் ஆயத்தங்களோ, திட்டங்களோ எமது நாட்டில் இன்றுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் 63 விளையாட்டு சங்கங்கள் காணப்பட்டாலும், ஒருசில சங்கங்களைத் தவிர மற்றைய எல்லா சங்கங்களும் விளையாட்டுத்துறை அமைச்சின் உதவியைத் தான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இதனால் எமது வீரர்களுக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் அனுபவம் தான் ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கொடுக்கின்றது. இது விளையாட்டுக்கு மாத்திரம் விதிவிலக்கல்ல. எனவே, உள்ளூர் மட்டப் போட்டிகளில் மாத்திரம் திறமைகளை வெளிப்படுத்தி எந்தவொரு அனுபவமும் இல்லாமல் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டித் தன்மை கொண்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல முடியும் என்பது பகல் கனவாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

பெண்களுக்கான மரதனில் புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி

இப்போதைய நாட்களில் இலங்கையினை சேர்ந்த தடகள வீர, வீராங்கனை கள் சர்வதேச…

அடுத்தது என்ன?

இவ்வருடத்தைப் பொறுத்தமட்டில் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு முக்கிய போட்டித் தொடராக எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா அமையவுள்ளது. இந்தத் தொடருக்கான முழு ஏற்பாடுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

எனினும், குறித்த தொடருக்கு முன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாரில் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அமெரிக்காவில் வசித்து வருகின்ற தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி ஜயரத்ன அண்மையில் பெற்றுக் கொண்டார். இவரைத் தவிர எந்தவொரு வீரர்களும் அதற்கான அடைவு மட்டத்தினை இதுவரை பூர்த்தி செய்யவில்லை.

அதேபோல, அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவுக்கான இலங்கை அணியின் பங்குபற்றல் குறித்து தற்போது எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<