சர்வதேச கால்பந்தில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மார்

FIFA World Cup 2026

6
neymar

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஜாம்பவான் நெய்மார் ஜூனியர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நியூ ஜேர்ஸி, மெட்லைவ் விளையாட்டரங்கில் நேற்று (06) நடைபெற்ற 16 அணிகள் சுற்றில் பிரேசிலை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட நோர்வே, உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக காலிறுதியில் விளையாட தகுதிபெற்றது. ஃபிஃபா உலகக் கிண்ண

மறுபுறத்தில், 5 முறை உலகக் கிண்ண சம்பியனான பிரேசில் அணி, 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரேசில் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஜூனியர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை மேலும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

முன்னதாக, தொடர் காயம் காரணமாக இம்முறை ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் பிரேசில் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே நெய்மர் விளையாடி இருந்தார். அதிலும் நேற்று நடைபெற்ற நோர்வே அணிக்கு எதிரான போட்டியின் இறுதி நிமிடத்தில், அவர் பிரேசில் அணிக்கான ஆறுதல் கோலையும் பதிவு செய்தார். இருப்பினும், அவரால் அணியின் தோல்வியைத் தடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்து மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நெய்மார், ‘நான் இறுதிவரை விடாமல் முயற்சி செய்தேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் எனது சர்வதேச பயணத்தை எங்கு தொடங்கினேனோ, அங்கேயே முடித்துக் கொள்கிறேன்’ என்று கூறி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இதே நியூஜெர்சி மைதானத்தில்தான் நெய்மார் ஜூனியர் பிரேசில் அணிக்காக தனது அறிமுக சர்வதேசப் போட்டியில் விளையாடினார். தற்போது அதே மைதானத்தில் தனது ஓய்வையும் அவர் அறிவித்துள்ளார். பிரேசில் அணிக்காக இதுவரை 130 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 34 வயதான நெய்மார், 80 கோல்களைப் பதிவு செய்து, பிரேசில் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும், அவரது தலைமையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பிரேசில் அணி தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தது. இருப்பினும், அவரால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாத ஏமாற்றத்துடனேயே அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவரது இந்த திடீர் ஓய்வு முடிவு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<