புதிய வீரர்களுடனான இலங்கை இறுதிக் குழாம் அறிவிப்பு

AFC Cup 2023

600

உஸ்பகிஸ்தானில் இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கையின் இறுதி குழாம் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணியை தயார்படுத்தும் வகையில், கடந்த மாதம் 24ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் உத்தேச குழாம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உள்நாட்டிலும் கட்டார் நாட்டிலும் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, கட்டாரில் இலங்கை வீரர்கள் நேபாளம் அணியுடன் விளையாடிய உத்தியோகபூர்வமற்ற பயிற்சிப் போட்டியை 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடித்தனர்.

குறித்த பயிற்சிகளின் நிறைவில் இலங்கை தேசிய அணி இந்த தொடருக்காக கட்டாரில் இருந்து உஸ்பகிஸ்தான் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில், 23 பேர் அடங்கிய இறுதி குழாம் இன்று (07) இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தேச குழாத்தில் அணியின் தலைவரும் சிரேஷ்ட வீரருமான சுஜான் பெரேராவுடன் சேர்த்து ஆறு கோல் காப்பாளர்கள் இருந்தனர். எனினும், இறுதி குழாத்தில் சுஜான் பெரேரா, கவீஷ் பெர்னாண்டோ மற்றும் பிரபாத் அறுனசிறி ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதேவேளை மொஹமட் முர்ஷித், நுவன் கிம்ஹான, ராசிக் றிஷாட் ஆகிய கோல் காப்பாளர்கள் இறுதி குழாத்தில் இணைக்கப்படவில்லை.

மேலும், வட மாகாண வீரர் ஜேசுதாசன் மற்றும் இளம் வீரர் ஷெனால் சந்தேஷ் ஆகியோர் முதல் முறையாக தேசிய குழாத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மற்றொரு வட மாகாண வீரரான தர்மகுலநாதன் கஜகோபன் கடந்த 2019ஆம் ஆண்டு பங்கபந்து தொடருக்கு இலங்கை அணியில் இணைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் தற்போது தேசிய அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்பும் தேசிய அணியில் இருந்த அனுபவம் கொண்ட அபீல் மொஹமட் நீண்ட காலம் உபாதையில் இருந்து, தற்போது பூரண குனமடைந்துள்ள நிலையில் நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

உத்தேச குழாத்தில் இணைக்கப்பட்டு கட்டாருக்கு விஜயம் செய்திருந்த மொஹமட் பயாஸ், லசித்த பெர்னாண்டோ, மொஹமட் ஹஸ்மீர், தரிந்து தனுஷ்க, வின்சண்ட் கீதன், மொஹமட் முதஸ்தாக் மற்றும் கிளிண்டன் ஆகியோர் இறுதி குழாத்தில் இணைக்கப்படவில்லை.

அதேபோன்று இளம் முன்கள வீரரான திலிப் பீரிஸ் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இறுதி குழாத்தில் இணைக்கப்படவில்லை. திலிப் பீரிஸ் தனது உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நட்சத்திர வீரர் வசீம் ராசிக் உத்தேச குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், தேசிய அணியுடன் இணையாமையினால் இறுதி குழாத்தில் அவரது பெயர் உள்வாங்கப்படவில்லை.

ஆசிய கிண்ண போட்டிகளுக்கான மூன்றாம் கட்ட தகுதிச் சுற்றில் C குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, குறித்த குழுவுக்கான போட்டிகளை நடாத்தும் உஸ்பகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மாலைதீவுகள் ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது.

இலங்கை முதல் போட்டியில் 8ஆம் திகதி உஸ்பகிஸ்தானையும், 11ஆம் திகதி தாய்லாந்தையும், 14ஆம் திகதி மாலைதீவுகளையும் எதிர்கொள்ளவுள்ளது. போட்டிகள் அனைத்தும் உஸ்பகிஸ்தானின் மர்கஸிய் அரங்கில் இடம்பெறவுள்ளன.

இந்த 23 பேர் அடங்கிய குழாம் விளையாட்டுத் துறை அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனினும், அமைச்சின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை குழாம்  

சுஜான் பெரேரா (அணித் தலைவர்), தர்மகுலநாதன் கஜகோபன், அசிகுர் ரஹ்மான், ஷரித்த ரத்னாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ, ஷலன சமீர, மெஹமட் பசால், மொஹமட் ஆகிப், கவீஷ் லக்பிரிய, பிரபாத் அறுனசிறி, ஷமோத் டில்ஷான், அப்துல் பாசித், , மரியதாஸ் நிதர்சன், ஷதுரங்க மதுஷான், S ஜேசுதாசன், மொஹமட் சபீர், அபீல் மொஹமட், மொஹமட் சிபான், ஷெனால் சந்தேஷ், சசன்க டில்ஹார, மொஹமட் அமான், ஜூட் சுபன், டிலன் டி சில்வா

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<