மீண்டும் நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரும்பும் பிராவோ

199

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர சகலதுறைவீரரான டுவெய்ன் பிராவோ, மீண்டும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

டுவெய்ன் பிராவோ 2013 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வந்திருந்தார். எனினும் அவர் அதன் பின்னர் குறித்த அணியில் இருந்து விலகியதோடு 2021ஆம் ஆண்டு CPL தொடரில் சென்.கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணிக்காக ஆடியிருந்தார்.

இந்த நிலையில் T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவராக இருக்கும் பிராவோ, CPL T20 தொடரின் புதிய பருவத்தில் மீண்டும் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்கு விளையாடுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியில் இணைவது தொடர்பில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பிராவோ தெரிவித்துள்ளார். இதேவேளை, நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரான கீய்ரோன் பொலார்ட், பிராவோ தன்னுடைய சொந்த அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

CPL போட்டிகளில் மொத்தமாக 127 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் பிராவோ, அதில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக 100 விக்கெட்டுக்களை கைப்பற்றி குறித்த அணிக்காக அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியிருந்தார் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.

டுவேய்ன் பிராவோ தற்போது நடைபெற்று வரும் IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் குழாத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான CPL T20 தொடர் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<