சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நேற்று (27ஆம் திகதி) வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.
சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார் அரங்கில் தங்கப் பதக்கத்திற்காக நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவிற்கு கடும் சவாலை அளித்தனர். முதல் பாதி நிறைவடைந்தபோது இந்தியா 20-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இருப்பினும், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 27 புள்ளிகளைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணியால் 13 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 47-31 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கபடியில் தங்கப் பதக்கம் வெல்வது இது தொடர்ச்சியான 6-வது முறையாகும். இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன.
இதனிடையே, வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவியாக மதுரிகா ஹன்சமாலி செயல்பட்டதுடன், விமலேந்திரன் டிலக்சனா, ஹன்சிகா குமுதினி, கஜெந்தினி ராஜா, ப்ரியவர்ணா ராசதுரை மற்றும் ஷானிகா சுதர்ஷனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
- 10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம்
- ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்
- 60 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணிக்கு வெண்கலம்
இந்த நிலையில், ஆடவர் பிரிவில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஈரான் அணியிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மற்றுமொரு அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தானும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
எவ்வாறாயினும், இறுதிப் போட்டியில் இந்தியாவை 44-31 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஈரான் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் ஆடவர் கபடியில் இலங்கை அணி வெண்கலம் வெல்வது இது நான்காவது முறையாகும். வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை ஆடவர் அணியில் மிலிந்த சதுரங்க, சமிந்த சந்துஷ், டிலான் சஞ்சய, ருவன் சமரகோன், மொஹமட் அன்சாப் மற்றும் ஆபித் அகார் ஆகியோர் இடம்பிடித்திருதனர்.
இதேவேளை, இந்த இரண்டு பதக்கங்களுடன் சேர்த்து, இம்முறை ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை வென்றுள்ள மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இலங்கை 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<






















