சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இன்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான 4×60 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இம்முறை ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கை வென்ற 4ஆவது பதக்கம் இதுவாகும். இந்த 4 பதக்கங்களும் மெய்வல்லுநர் போட்டியில் கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
மலித் தமேல், மலித் தருஷான், மனுஜ ப்ரபாஷ் மற்றும் சந்துன் தியலவத்த ஆகிய வீரர்களைக் கொண்ட இலங்கை அஞ்சலோட்ட அணி, குறித்த போட்டித் தூரத்தை 27.57 செக்கன்களில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
இப்போட்டியில் பலத்த சவாலுக்கு மத்தியில் சீனா தங்கப் பதக்கத்தையும், தாய்லாந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின.
- 10 வருடங்களின் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா இன்று ஆரம்பம்
- ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்
சர்வதேச அரங்கில் தொடர்ந்து சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வரும் இலங்கை மெய்வல்லுநர் அணிக்கு, இம்முறை ஆசிய கடற்கரை விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சியில் கிடைத்துள்ள நான்காவது பதக்கம் இதுவாகும். இலங்கை வீரர்களின் இந்தத் தொடர்ச்சியான வெற்றி, விளையாட்டுத் துறையில் நாட்டுக்கு மேலும் ஒரு பெருமிதத்தை சேர்த்துள்ளது.
இதேவேளை, பெண்களுக்கான 4×60 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் இறுதிச்ற்றில் இலங்கை அணி நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆசியாவின் பலத்த அணிகளுக்கு மத்தியில் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி, பதக்க வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு நான்காவது இடத்துடன் தனது போட்டியை நிறைவு செய்தது. இப்போட்டியில் தாய்லாந்து அணி தங்கப் பதக்கத்தை வென்றதோடு, பிலிப்பைன்ஸ் வெள்ளிப் பதக்கத்தையும், போட்டி நடத்தும் வரவேற்பு நாடான சீனா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.
இது இவ்வாறிருக்க, ஆசிய கடற்கரை விளையாட்டு விழா 4ஆவது நாள் நிறைவுக்கு வரும் போது பதக்கப் பட்டியலில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<






















