பந்தை சேதப்படுத்துமாறு கூறியது யார்? ; உண்மையை வெளியிட்ட பென்கிரொப்ட்

955
Image courtesy - ICC

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்காக ஒன்பது மாத போட்டித் தடைக்கு முகங்கொடுத்திருந்த கெமரூன் பென்கிரொப்ட், குறித்த பந்தை தேசப்படுத்தும் திட்டத்துக்கு ஆலோசனை கூறியது முன்னாள் உபத் தலைவர் டேவிட் வோர்னர் என்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஆஸி. அணியின் தலைவராக 7 வயதுடைய லெக் ஸ்பினர்

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் குழாமில் லெக் ஸ்பின்…

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெமரூன் பென்கிரொப்ட், மணல் கடதாசியின் மூலம் பந்தின் தன்மையை மாற்றியமைத்ததாக குற்றச்சாட்டப்பட்டது. அத்துடன் குறித்த காணொளி வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதன் மூலம் கெமரூன் பென்கிரொப்ட்டுக்கு 9 மாத போட்டித் தடையையும், வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு தலா ஒரு வருட போட்டித் தடையையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வழங்கியிருந்தது.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்துக்காக மூவரும் மன்னிப்பு கோரியிருந்த போதிலும், இதற்கான முக்கியமான காரணம் யார்? என்பதனை வெளிப்படையாக தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் முதன் முறையாக பென்கிரொப்ட், குறித்த திட்டத்துக்கான முக்கிய காரணம் டேவிட் வோர்னர்தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பென்கிரொப்டின் தடைக் காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், அவரிடம் தனியார் தொலைக்காட்சியொன்றுக்காக எடம் கில்கிரிஸ்ட் மேற்கொண்ட செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் முழுமையாக குறிப்பிட்ட பென்கிரொப்ட்,

“கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தும் ஆலோசனையை டேவிட் வோர்னர்தான் வழங்கினார். உடைமாற்றும் அறையில் வைத்து என்னுடன் கலந்துரையாடிய வோர்னர், அவர் குறிப்பிடும் நேரத்தில் திட்டத்தை செயற்படுத்துமாறு கூறினார்.அதனை ஏற்றுக்கொண்டு நானும் செயற்பட்டேன்.

இந்த திட்டமானது, என்மீது உள்ள மதிப்பின் அடிப்படையில் என்னிடம் கொடுக்கப்பட்டது. நான் இதற்கு பொருத்தமானவன் என்பதை அவர்கள் உணர்ந்து, முழுமையாக நம்பி இந்த பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தனர். என்மீது, நம்பிக்கை வைத்து அவர் இந்த விடயத்தை என்னிடம் கொடுத்ததால், நான் வேறு எதனையும் சிந்திக்காமல் தவறினை செய்துவிட்டேன். எனது மரியாதையையும் சிதைத்துக் கொண்டேன்.

குறித்த தவறுக்கு வேறு யாரும் பொருப்பேற்க வேண்டியதில்லை. காரணம், நான்தான் இதனை செய்தேன் அதனால் நான்தான் இந்த தவறுக்காக பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் என்னிடம் கேட்ட போது, எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று நான் செய்திருக்கலாம், இல்லை முடியாது என கூறியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் நான் எதையும் சிந்திக்காமல், தவறு என்பதை அறிந்தும் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டு விட்டேன்.

நான் செய்த குற்றத்தின் தன்மை இப்போது புரிகிறது – ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தலைவனாக தான் தோற்றுவிட்டேன்…

இவ்வாறு நான் தவறு செய்ததால், அந்த போட்டியில் நாம் வெற்றி பெறுவதற்காக இருந்த வாய்ப்பும் பறிபோனது. அணியின் சக வீரர்கள் தலைக்குணிய வேண்டியும் நேரிட்டது. அதேநேரம், இந்த தவறால் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பாரதூரமான மாற்றங்கள் இடம்பெற்று விட்டது. இதனால் நான் மனம் வருந்தி வருகிறேன்” என்றார்.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில், கெமரூன் பென்கிரொப்டுக்கு 9 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், அவருக்கான தடை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இதன்படி, பிக்பேஷ் லீக்கில் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பென்கிரொப்ட், எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ள ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கான தடைக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.