கென்யாவின் நைரோபயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு குறுந்தூர ஓட்ட விராங்னை மேதானி ஜயமான்ன மற்றும் இசுரு கௌஷல்ய ஆகிய இருவரும் தகுதிபெற்றுக்கொண்டனர்.
இதில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற மெதானி தகுதிபெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
>> பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை
20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கான விசேட தெரிவுப் போட்டிகள் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றன.
இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தை 11.85 செக்கன்களில் மெதானி ஜயமான்ன நிறைவுசெய்தார். இதன்மூலம் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை மெதானி உறுதிசெய்தார்.
முன்னதாக இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 24.01 செக்கன்களில் நிறைவு செய்து மெதானி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்தப் போட்டியில் பதிவுசெய்த நேரப் பெறுதியுடன் அவர் ஏற்கனவே உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார் நிமாலி
இதேவேளை, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 46.90 செக்கன்களில் நிறைவுசெய்து வெற்றிபெற்ற இசுரு கௌஷல்யவும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
மதுகம ஆனந்த சாஸ்திராலய கல்லூரி மாணவனான இசுரு, இந்த ஆண்டில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கனிஷ்ட வீரரொருவரினால் பதிவுசெய்யப்பட்ட 7ஆவது அதிசிறந்த நேரத்தையும் இதன்மூலம் பதிவுசெய்தார்.
எனினும், முன்னதாக இந்தப் போட்டியை 47.35 செக்கன்களில் இசுரு கௌஷல்ய நிறைவுசெய்து உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்புக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஏற்கனவே தகுதிபெற்றிருந்த கம்பஹா திருச் சிலுவைக் கல்லூரி மாணவி ஷானிகா லக்ஷானி மற்றும் வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி தருஷி கருணாரத்ன ஆகிய இருவரில் நேற்றைய தினம் ஷானிகா மாத்திரம் தெரிவுப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
>> பாடசாலை வீராங்கனையால் 1,500 மீற்றரில் புதிய சாதனை
எதுஎவ்வாறாயினும், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற ஏற்கனவே தகுதபெற்றிருந்த தருஷி கருணாரத்ன, நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 55.29 செக்கன்களில் ஓடிமுடித்து வெற்றி பெற்றார்.
எனினும், அவரால் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான அடைவ மட்டத்தை (54.85 செக்.) நெருங்க முடியாமல் போனது.
அதேபோல, மேலும் சில வீர வீராங்கனைகள் அடைவு மட்டத்தை நெருங்கியபோதிலும் அவர்களால் துரதிஷ்டவசமாக தகுதிபெற முடியாமல் போனது.
எனினும், உலக தரவரிசைப் பட்டியலில் பிரகாரம் அவர்களுக்கு உலக கனிஷ்ட மெய்வல்லுனர் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வயதுக்குட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி கென்யாவில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<