டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார் நிமாலி

Tokyo Olympic - 2020

145

இலங்கையின் மெய்வல்லுனர் வீராங்கனை நிமாலி லியனஆராச்சி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளார் என தேசிய ஒலிம்பிக் சங்கம் இன்று (05) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளனர் என தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

யுபுன், நிலானி டோக்கியோ ஓலிம்பிக்கிற்கு தகுதி

இதில் ஒலிம்பிக் வாய்ப்பை எதிர்பார்த்து நிலானி ரத்னாயக்க, அண்மையில் நடைபெற்ற 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தார். 

எனினும், குறித்த போட்டியில் நிலானி வெண்கலப் பதக்கம் வென்ற போதிலும், அவரால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இதில் குறித்த போட்டி நடைபெறுவதற்கு முன்னர் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பங்கீட்டு முறைக்கான பட்டியலில் முதல் 45 பேரில் கடைசி இடத்தில் நிலானி ரத்னாயக்க இடம்பெற்றிருந்தார். இதனால் அவருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற வீரர்களின் இறுதிப்பட்டியலை சர்வதேச மெய்வல்லுனர் சங்கம் நேற்றுமுன்தினம வெளியிட்டிருந்தது.

இதில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பங்கீட்டு முறையில் முதல் 45 இடங்களில் உள்ள வீராங்கனைகளுக்கு மாத்திரம் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, ஒலிம்பிக் பங்கீட்டு முறைக்கான புதிய பட்டியலில் நிலானிக்கு 46ஆவது இடம் கிடைத்ததனால் ஒரு இடத்தினால் ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். 

இதுஇவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலகளாவிய பங்கீட்டு முறையில் இலங்கைக்கு வாய்ப்பு வழங்குமாறு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு உலக மெய்வல்லுனர் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் அங்கீகாரம் வழங்கியது.

இதற்கமைய டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டிக்கு நிமாலி லியனஆராச்சியின் பெயரை பரிந்துரைக்க இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு வெண்கலம்

எனவே, தற்போது நிலானி ரத்னாயக்கவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள ஒலிம்பிக் பங்கீட்டின் அடிப்படையில் நிமாலி லியனஆராச்சி ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கான 800 மீட்டரில் முன்னாள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியனான நிமாலி, அண்மையில் நிறைவுக்குவந்த 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுநர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

800 மீட்டரில் தெற்காசியாவின் முன்னாள் சம்பியனான நிமாலி, 2017இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். 

இதன்மூலம் 13 வருடங்களுக்குப் பிறகு ஆசிய மெய்வல்லுனர் தொடரொன்றில் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட முதலாவது தங்கப் பதக்கமாக இடம்பிடித்தது.

ஓலிம்பிக் வாய்ப்பை உறுதிசெய்தார் ஜூடோ வீரர் சாமர நுவன்

2019 தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன் துரஷ்திடவசமாக வாகன விபத்தில் சிக்கிய நிமாலி சிறிது காலம் மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து மீண்டும் தேசிய மட்டப் போட்டிகளில் களமிறங்கிய அவர், இவ்வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<