பங்களாதேஷுடன் போராடித் தோற்றது இலங்கை

71
Image Courtesy - All Nepal Football Association

தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை கால்பந்து அணி, தாம் சந்தித்த மூன்றாவது போட்டியில் பங்களாதேஷுடன் போராடிய பின்னர் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. 

இந்தப் போட்டிக்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் தலா இரு போட்டிகளில் விளையாடியிருந்தன. இதில், இலங்கை அணி இரண்டு சமநிலையான முடிவுகளையும், பங்களாதேஷ் ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலை என்ற முடிவுடனும்  டசரங்க ரங்கசாலா அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலில் களம் கண்டது. 

சுபனின் அற்புத கோலினால் நேபாலை சமப்படுத்திய இலங்கை

தெற்காசிய விளையாட்டு விழாவில்…

போட்டியின் முதல் 10 நிமிடங்களிலும் இலங்கை வீரர்கள் பந்துப் பரிமாற்றத்தில் பல தவறுகளை விட்டனர். குறிப்பாக, எதிரணியின் ஒரு பின்கள வீரரும், இலங்கை அணியின் இரண்டு முன்கள வீரர்களும் பங்களாதேஷ் கோல் எல்லையில் இருக்கும்போது, நவீன் ஜூட் சக வீரருக்கு பந்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளாமையினால், எதிரணி வீரர் வேகமாக வந்து பந்தை அங்கிருந்து வெளியேற்றினார். 

அடுத்த நிமிடம் இலங்கை அணியின் பின்கள வீரர்கள் பந்தைத் தடுப்பதில் விட்ட தவறைப் பயன்படுத்தி மொஹ்புபுர் ரஹ்மான் பங்களாதேஷ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.  

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக்கினை சுந்தரராஜ் நிரேஷ் பெற்றார். அவர் உதைந்த பந்து பங்களாதேஷ் கோல் காப்பாளர் அனிசுர் ரஹ்மானின் தடுப்பில் பட்டு வெளியே சென்றது. 

30 நிமிடங்கள் கடந்த நிலையில், ஆகிப் கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பங்களை அண்மித்து வெளியே சென்றது. 

சில நிமிடங்களில் பங்களாதேஷ் வீரர்கள் கோலுக்கு எடுத்த வேகமான உதையை சுஜான் தடுக்க, இலங்கை பின்கள வீரர்கள் அங்கிருந்து பந்தை வெளியேற்றினர்.  

Photos: Day 5 | South Asian Games 2019

ThePapare.com | Dinushki Ranasinghe | 05/12/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

35 நிமிடங்கள் கடந்த நிலையில், முன்கள வீரர் மொஹமட் ஆகிப் உபாதையினால் வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக திலிப் பீரிஸ் மைதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். 

முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் நவீன் ஜூட் பாய்ந்து கோல் நோக்கி உதைந்த பந்தை அனிசுர் ரஹ்மான் பிடித்தார்.    

முதல் பாதி: இலங்கை 0 – 1 பங்களாதேஷ்  

இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் இலங்கை பின்கள மற்றும் மத்தியகள வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றங்கள் பலவற்றை மேற்கொண்டு முன்கள வீரர் திலிப் பீரிஸிற்கு வழங்கியபோதும் அவர் அவை அனைத்தையும் சிறப்பாக பயன்படுத்தவில்லை. 

எனவே, 60 நிமிடங்கள் கடந்த நிலையில் திலிப்பிற்குப் பதிலாக அல்ப்ரட் தனேஷ் மைதானத்திற்கு உள்வாங்கப்பட்டார். 

இரண்டாம் பாதியின் 25 நிமிடங்களுக்கும் இலங்கை வீரர்கள் மூலம் பங்களாதேஷ் கோல் நோக்கி ஒருசில முயற்சிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது. 

நீண்ட நேரத்தின் பின்னர், இலங்கை அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக மைதானத்தின் ஒரு திசையில் இருந்து உயர்த்தி உள்ளனுப்பப்பட்ட பந்தை ஷமோத் டில்ஷான் ஹெடர் செய்ய, அனிசுர் ரஹ்மான் அதனைப் பாய்ந்து பிடித்தார். 

அடுத்த நிமிடங்களில் பங்களாதேஷ் வீரர் நீண்ட தூரத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து சுஜான் பெரேரா பாய்ந்து வெளியே தட்டிவிட்டார். 

தொடர்ந்து பங்களாதேஷ் வீரர் ஹசன் இலங்கை பின்கள வீரரைத்  தாண்டி வந்து பெற்ற கோலுக்கான சிறந்த முயற்சியை சிறந்த முறையில் நிறைவு செய்யாமல் இருக்க இலங்கை பின்கள வீரர்கள் பந்தை திசை மாற்றினர். 

அதேபோன்று, மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பினை மொஹமட் இப்ராஹிம் வெளியே அடித்து வீணடித்தார். 

பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் பல தடவை எதிரணியின் பல வீரர்களைத் தாண்டி வேகமாக பந்தை முன்னோக்கி எடுத்து வந்து பரிமாற்றம் செய்தபோதும், ஏனைய வீரர்களால் அவற்றை வெற்றிகரமாக கோல் நோக்கி எடுத்துச் செல்ல முடியாமல் போனது. 

அது போன்றே, இலங்கை வீரர்கள் உயர்த்தி முன்னோக்கி செலுத்திய பந்துப் பரிமாற்றங்களை பங்களாதேஷ் வீரர்கள் சிறப்பாக தடுத்தாடினர். 

எனவே, போட்டியின் நிறைவில் பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் பெற்ற கோலினால் 1-0 என வெற்றி பெற்றது. இலங்கை அணி 2 சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளை மாத்திரம் பெற்றுள்ளமையினால், தங்கப் பதக்கத்தினை வெல்லவதற்கான வாய்ப்பு குறைவடைந்துள்ளது.

இலங்கை அணி, தமது குழு நிலையில் இறுதி மோதலில் எதிர்வரும் சனிக்கிழமை பூட்டான் அணியுடன் மோதவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 0 – 1 பங்களாதேஷ்

கோல் பெற்றவர்கள் 

பங்களாதேஷ் – மொஹ்புபுர் ரஹ்மான் 11’  

மஞ்சள் அட்டை 

இலங்கை – சுந்தரராஜ் நிரேஷ் 74’
பங்களாதேஷ் – மொஹமட் ஹசன் 79’ 

>>SAG செய்திகளைப் படிக்க<<