வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் – உத்தப்பா

71
espncricinfo

இந்திய கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டில் நடைபெறும் ஓரிரண்டு லீக் தொடர்களிலாவது விளையாட இந்திய கிரிக்கெட் சபை அனுமதிக்க வேண்டும் என ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடினாலும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதிப்பதில்லை.

கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

குறித்த இந்த விடயத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வந்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா, கிரிக்கெட் சபையின் T20 ஒப்பந்தத்தை பெறாத வீரர்களை, வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

அதனிடைய மேற்குறித்த விடயம் தொடர்பில் ரொபின் உத்தப்பா குறிப்பிடுகையில், “கடவுளுக்கு உண்மையாக எங்களை தயவுசெய்யு செல்ல விடுங்கள். எங்களை விளையாட அனுமதிக்காத விடயம் வருத்தமடைய செய்கிறது. வெளிநாடு சென்று ஓரிரண்டு தொடர்களில் விளையாடுவது மிகச்சிறப்பாக இருக்கும். அதேநேரம், கிரிக்கெட்டின் மாணவர்களாக இருக்கும் எமக்கு இதுபோன்ற தொடர்களில் கற்றுக்கொள்ளவும், அதன் மூலம் வளர்ச்சி பெறவும் முடியும்” என்றார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளான ஸ்மிரிட் மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீட் கஹூர் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் பிக்பேஷ் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் சுப்பர் லீக் தொடர்களில் விளையாடினர். எனினும், இந்திய ஆடவர் அணியின் எந்தவொரு வீரருக்கும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு, ஹொங்கொங் T20 ப்ளிட்ஸ் தொடரில் பங்கேற்கும் அனுமதியை இந்திய கிரிக்கெட் சபை வழங்கியிருந்தது. ஆனாலும், சில நாட்களுக்கு பின்னர் அந்த அனுமதியை கிரிக்கெட் சபை மீளப்பெற்றிருந்தது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் சௌரவ் கங்குலி, இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதில் உள்ள தடையை நீக்குவார் என ரொபின் உத்தப்பா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“கங்குலி செயற்திறன் மிக்க சிந்திப்புகளை வெளிப்படுத்தக்கூடிய மனிதர். இந்திய கிரிக்கெட்டை அடுத்த மட்டத்துக்கு கொண்டு செல்ல நினைப்பவர். இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நிலைக்கு அடித்தளம் இட்டது இவர் என்பதுடன், மேற்குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் சிறந்த முடிவொன்றை தருவார் என நம்புகிறேன்” என ரொபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<