மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்

1601

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இது தொடர்பான ஊடகவிலாளர் சந்திப்பு ஒன்று இன்று (09) இடம்பெற்றிருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த இங்கிலாந்து அணியின் உப தலைவரும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரருமான ஜோஸ் பட்லர், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மாலிங்கவின் பந்துவீச்சிலுள்ள நுணுக்கங்களை அறிவதற்கு மாலிங்கவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து வேலை செய்தது உதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“மாலிங்க நீண்ட காலமாக அங்கே (மும்பை இந்தியன்ஸ் அணியில்) இருந்து வருகின்றார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளிலும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக எங்களது வீரர்கள் சில போட்டிகளில் விளையாடியுள்ள இதேநேரம், நானும் அவருடன் மும்பை அணியில் பயிற்சி வலைகளின் கீழ் விளையாடியுள்ளேன். இதனால், அவரது பந்துவீச்சுப்பாணி எனக்கு பரிச்சயமான ஒன்றாக மாறியிருக்கின்றது“ என்றார்.

இலங்கையின் புதிய மாற்றங்களும், சொந்த மண்ணும் இங்கிலாந்துக்கு பாதகமாகுமா?

மேலும் பேசிய பட்லர், மாலிங்கவின் பந்துவீச்சு பரிச்சயமான ஒன்றாக இருந்த போதிலும்  அதில் இன்னும் சவால்கள் இருப்பதை விளக்கினார்.

“அவரது பந்துவீச்சினை எதிர்கொள்வது சவாலான ஒரு பகுதியாகும்“

எனினும், பட்லர் தமது தரப்பு வீரர்கள் மாலிங்க போன்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை முறையாக எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் அனைத்தினையும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Photo Album – Sri Lanka practice session before 1st ODI against England

இந்தியாவில் இடம்பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய அனுபவம் இலங்கை போன்ற நாடுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உதவியாக இருக்குமா? என்கிற கேள்வியும் ஊடகவியலாளர்களால் ஜோஸ் பட்லரிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதில் தந்த அவர், ”ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய வீரர்கள் பலர் தமது குழாத்தில் இருப்பதால் அது இலங்கையுடன் நடைபெறவுள்ள போட்டிகளில் தங்களது வீரர்கள் சிறப்பாக செயற்பட உதவும் ஒரு காரணியாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

அத்தோடு இங்கிலாந்து அணிக்காக இந்த ஆண்டு அதிக ஓட்டங்கள் பெற்றுத்தந்த வீரர்களில் முன்னணியில் இருக்கும் ஜோஸ் பட்லர் தமது அணியில் அனுபவம் கொண்ட தமது வீரர்கள் பலர் இருப்பதாகவும், அவ் வீரர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருப்பதால் அந்த அனுபவம் தங்களது தொடரில் ஜொலிக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

Photo Album – England practice session before 1st ODI against Sri Lanka

ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பகலிரவு ஆட்டமாக நாளை (10) தம்புள்ளை நகரில் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை எதிர்கொள்கின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க