இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய ஷாருஜன்

West Indies Emerging Team tour of Sri Lanka 2026

53
team

ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (18) நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதியுமான நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஒரு நாள் மீதமிருக்கையிலேயே இன்னிங்ஸ் மற்றும் 216 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த அதிரடி வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் தனது பலத்த துடுப்பாட்ட வலிமையை வெளிப்படுத்திய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியக அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பில் ஷக்கரே  பெரிஸ் 99 ஓட்டங்களையும், ரிவால்டோ கிளார்க் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

பந்துவீச்சில் சமோத் பட்டகே 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், நிசல அபேரட்ன 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு  தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த  இலங்கை  வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 553 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இலங்கை அணி சார்பில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் அஞ்சல பண்டார, 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் அவர் பெற்ற தொடர்ச்சியான மூன்றாவது சதம் இதுவாகும். அஞ்சல பண்டார மற்றும் ஷாருஜன் சண்முகநாதன் ஆகிய இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்காக 156 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதில் சாருஜன் சண்முகநாதன் 91 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் பாரிய ஓட்ட வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறி 29.5 ஓவர்களில் வெறும் 106 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல்பந்து வீச்சாளர் அசித வன்னிநாயக்க எதிரணியின் விக்கெட்டுகளைச் சரித்து, வெறும் 1.5 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சக்தி உதார 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் ஆரம்பத்தில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் புலிந்து பெரேரா 145 ஓட்டங்களைப் பெற்று அணியின் பிரம்மாண்டமான ஓட்டக் குவிப்பிற்கு வலுவான அடித்தளத்தை இட்டிருந்தார். அவரது இந்தச் சிறந்த ஆட்டத்திற்காக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதேவேளை, சமநிலையில் முடிந்த முதலாவது நான்கு நாள் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியிருந்த அஞ்சல பண்டார, அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 1ஆவது இன் – 23110 (ஷக்கரே பெரிஸ் 99, நேதன் எட்வேர்ட் 28, சமோத் பட்டகே 51 – 4 விக்., நிசல அபேரட்ன 38 – 2 விக்., சக்தி உதார 61 – 2 விக்.)

 

இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணி 1ஆவது இன்: 5535 – (புலிந்து பெரேரா 145, அஞ்சல பண்டார 105, ஷாருஜன் சண்முகநாதன் 74, ரவிந்து ரசன்த 60, அசித்த வன்னிநாயக்க 60, ஸிஷான் மொட்டாரா 101 – 2 விக்.)

 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 2ஆவது இன் – 10610 (ஷக்கரே பெரிஸ் 28, டெமெல் எவ்லின் 26, ரிவால்டோ கிளார்க் 21, அசித்த வன்னிநாயக்க 1.5 –  4 விக்., சக்தி உதார 25 – 3 விக், மிஹரங்க சில்வா 24 – 2 விக்.)

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<