இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மற்றுமொரு பின்னடைவாக, இங்கிலாந்து பந்துவீச்சு சகலதுறைவீரர் ஜேமி ஓவர்டனின் உபாதை மாறியிருக்கின்றது.
>>சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இளம் சகலதுறைவீரர்<<
அந்தவகையில் ஜேமி ஓவர்டன் தனது வலது தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக தனது தாயகமான ஐக்கிய இராச்சியத்திற்கு திரும்பியுள்ளார். CSK நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை ஓவர்டனின் உபாதை தொடர்பில் பதிவிட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி IPL தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு செல்ல முக்கிய போட்டிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் ஓவர்டனின் உபாதை அவ்வணிக்கு பாரிய சவாலாக மாறியிருக்கின்றது. நாளை (15) லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணியை சென்னை வீரர்கள் எதிர்கொள்ளவுள்ள நிலையில் ஓவர்டனிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் களமிறக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் ஜேமி ஓவர்டன் இம்முறைக்கான IPL தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லக்னோ அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், அதிரடியாக ஆடிய லக்னோ அணியைக் கட்டுப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஓவர்டன் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதேநேரம் இந்தப் பருவத்தில் அவர் 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி 136 ஓட்டங்களையும் குவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்துள்ள CSK அணிக்கு வீரர்களின் உபாதை பெரிய தலைவலியாகவே நீடிக்கின்றது. ஏற்கனவே ராமகிருஷ்ணா கோஷிற்குப் பதிலாக கர்நாடக வீரர் மெக்நீல் நோரோன்ஹா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்தப் பருவத்தில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள CSK அணியானது 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















