கரப்பந்து விளையாட்டில் கொரோனா தொற்று அதிகம்

408

இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையொன்றில் கொரோனா வைரஸ் வியாபிப்பதற்கு கரப்பந்தாட்ட விளையாட்டில் அதிக வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து விளையாட்டு உலகமும் தப்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது.

கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்

அதேபோல, மீண்டும் விளையாட்டுக்களை ஆரம்பிக்க முன் கிரிக்கெட், கால்பந்து மற்றும் றக்பி உள்ளிட்ட போட்டிகளின் விதிமுறைகளில் ஒருசில மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், இத்தாலியின் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அந்நாட்டின் ஒலிம்பிக் சங்கத்தின் வழிகாட்டலுடன் Polytechnic of Turin என்ற பல்கலைக்கழத்தினால் எந்தெந்த விளையாட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது குறித்து பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது

இதில் கரப்பந்தாட்ட விளையாட்டின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை Sport Safely Launches  என்ற பெயரில் 404 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது

இந்த அறிக்கையில் 387 விளையாட்டுக்கள் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கிறனவா என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், மீண்டும் அந்த விளையாட்டுக்களை ஆரம்பிக்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

அதற்காக இத்தாலியின் வைத்திய சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

அதன்படி, படகோட்டம், திறந்த நீச்சல் தடாகங்களில் குளிப்பது, கோல்ப் மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுக்களின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், டென்னிஸ் விளையாட்டில் மாத்திரம் வீரர்கள் கண்களுக்கான கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு விளையாட வேண்டும் எனவும், பந்து பரிமாற்றத்தின் போது ஒவ்வொரு வீரரும் தமக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட பந்தினை பயன்படுத்த வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இவையனைத்தும் தனி விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதில் மெய்வல்லுனர் விளையாட்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது

இலங்கையில் கிரிக்கெட், றக்பி, கால்பந்து பயிற்சிகள் ஜூன் முதல்

ஆனால், ஒருசில மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கையை வைத்து பயிற்சிகள் செய்வது முதல் போட்டிகள் நடைபெறும் வரை கொரோனா வைரஸின் அவதானம் சற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல, குழு நிலைப் போட்டிகளைப் பொறுத்தமட்டில் Water Polo விளையாட்டில் மாத்திரம் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. இது இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள விளையாட்டாகும்

அதற்கான காரணமாக வீரர்கள் க்ளோரின் நீரில் விளையாடுவதால் வைரஸ் தொற்றுக்கு ஆளாவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேநேரம், கால்பந்து விளையாட்டு 3ஆவது பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் றக்பி, கூடைப்பந்து, ஹேன்போல், மல்யுத்தம் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் 4ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த விளையாட்டுக்கள் ஊடாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் துளிர்விடும் கால்பந்து!

அதிலும் குறிப்பாக, கரப்பந்தாட்ட விளையாட்டில் வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய எல்லைக்குள் நடைபெறுகின்ற உள்ளக கரப்பந்தாட்ட போட்டிகளின் போது வீரர்கள் இடையே அடிக்கடி முட்டி மோதல்கள் மற்றும் தொடுகைகளின் மூலமாக வைரஸ் தொற்று மிக விரைவில் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது

இதனிடையே, ஒருவரை ஒருவர் நேராக சந்திக்கின்ற குத்துச்சண்டை மற்றும் மோதிக் கொள்கின்ற றக்பி, கூடைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களைக் காட்டிலும் கரப்பந்தாட்ட விளையாட்டில் தான் வைரஸ் பரவுவது அதிகம் இருப்பதாக குறித்த ஆய்வின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும், போட்டி ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன் அனைத்து வீரர்களும் வைத்திய பரிசோதனை மேற்கொள்வது, மேலதிக வீரர்கள் முகக்கவசங்களை அணிந்து கொள்வது மற்றும் குறித்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்ற பந்து உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கிருமி நாசினி போட்டு கழுவுவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<