தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அசங்க; பொதுச் செயலாளராக ரிஃப்டி பஹ்மி தெரிவு

12

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் 2026-2030 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்யும் தேர்தலில், அதன் தலைவராக இலங்கை பேஸ்போல் மற்றும் சொவ்ட்போல் சங்கத்தின் தற்போதைய தலைவர் அசங்க செனவிரட்ன ஐந்து மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

கொழும்பு டொரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒலிம்பிக் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (25) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கான போட்டியில் அசங்க செனவிரட்ன 16 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் 11 வாக்குகளையும், இலங்கை குறிபார்த்து சுடுதல் சங்கத்தின் உதவித் தலைவர் ஷிரன்த பீரிஸ் 2 வாக்குகளையும் பெற்றனர்.

அசங்க செனவிரட்ன தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்குத் தெரிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அவர் இதற்கு முன்னர் 2018 முதல் 2022 வரையான காலப்பகுதியில் இக்குழுவின் உப தலைவராக பணியாற்றியுள்ளார். முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த தேவா ஹென்றி மற்றும் ப்ரிதிவிராஜ் பெரேரா ஆகியோர் தேர்தலின் போது தமது வேட்புமனுக்களைத் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இந்தத் தேர்தலின் போது சில சர்ச்சைக்குரிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இலங்கை பனிச்சறுக்கு சங்கம் மற்றும் Triathlon சம்மேளனம் ஆகியவற்றின் வாக்குரிமையை இரத்துச் செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே விடுத்ததாகக் கூறப்படும் எழுத்துப்பூர்வ உத்தரவை, தேர்தல் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி சித்ரசிறி நிராகரித்தார். தேர்தல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கை ஜூடோ சம்மேளனத்தின் வாக்குரிமை முன்னரே இரத்து செய்யப்பட்டதால், மொத்தமுள்ள 31 வாக்குகளில் 30 வாக்குகள் மாத்திரமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

முன்னாள் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் ஏற்கனவே இரண்டு தவணைகள் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்திருந்தமையால், அரசியலமைப்பிற்கு இணங்க இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் ரிஃப்டி பஹ்மி (Rifdy Fahmy) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரிஃப்டி பஹ்மி 17 வாக்குகளைப் பெற்று, 4 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷாந்த பியசேன 13 வாக்குகளைப் பெற்றார்.

இலங்கை நீர்நிலை விளையாட்டுச் சங்கத்தின் (SLASU) செயற்குழு உறுப்பினரான ரிஃப்டி பஹ்மி, இதற்கு முன்னர் மெக்ஸ்வெல் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்குப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் நான்கு உப தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் சரத் ஹேவாவிதாரண, இக்பால் பின் இஸ்ஹாக், ப்ரிதிவிராஜ் பெரேரா மற்றும் நிலூ ஜயதிலக ஆகியோர் அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளனர். இவர்களில் இக்பால் பின் இஸ்ஹாக் தவிர்ந்த ஏனைய மூவரும் கடந்த நிர்வாக சபையிலும் உப தலைவர்களாகப் பணியாற்றியவர்களாவர்.

மேலும், உதவிச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் அஸ்மித சஞ்சய குணரட்ன 6 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று, புதிய உதவிச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 2026-2030 காலப்பகுதிக்கான தேசிய ஒலிம்பிக் குழுவின் பிரதான பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைந்துள்ளன.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<