2019இல் இலங்கை விளையாட்டுத்துறையில் நடந்தவை

174

நிறைவு பெற்றுள்ள 2019 ஆண்டு இலங்கை விளையாட்டுத் துறையில் ஏற்றமிகு ஆண்டாக விளங்கியது. ஆனாலும், இலங்கையின் விளையாட்டுத்துறையானது பல்வேறு சறுக்கல்களுக்கு முகங்கொடுத்தாலும், டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 40 தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டமை அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. 

கடந்த வருடத்தில் இலங்கையின் கிரிக்கெட் அணிக்கு எதிர்பார்த்தளவு வெற்றிகள் கிடைக்காவிட்டாலும், ஏனைய விளையாட்டுக்களில் ஓரளவு முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. எனவே கடந்த வருடம் முழவதும் விளையாட்டு உலகில் கலக்கிய நம்மவர்களைப் பற்றி இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது.

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட…

ஜனவரி

மரதன் ஓட்ட வீரரான ஹசன் எசுபலி அந்தாட்டிக் கண்டத்தின், அந்தாட்டிக் ஐஸ் மரதன் (Antarctic Ice Marathon) தொடரினை நிறைவு செய்ததன் மூலம், உலகின் ஏழு கண்டங்களிலும் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய முதல் இலங்கையர் என்னும் புதிய சாதனையினை நிலைநாட்டினார்.

பெப்ரவரி 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் ஜயந்த தர்மதாசவை 83 வாக்குகளால்  வீழ்த்தி ஷம்மி சில்வா புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில்  நடைபெற்ற அரை மரதன் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை 2க்கு 0 என கைப்பற்றி வரலாறு படைத்தது.

இலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் வீராங்கனையான செல்ஸி மெலனி பென்தரகே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

சர்வதேச டி20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் 1000 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 50 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சிறப்பை இலங்கையின் ஷசிகலா சிறிவர்தன பெற்றுக் கொண்டார்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் டிபெண்டர்ஸ் அணி 11 வருடங்களுக்குப் பிறகு சம்பியனாகத் தெரிவாகியது

முதல்தர கழகங்களுக்கிடையிலான றக்பி லீக் தொடரில் கண்டி கழகம் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சம்பியனாகத் தெரிவாகியது.

மார்ச்

கொழும்பு றோயல் மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற 140ஆவது நீல வர்ணங்களின் கிரிக்கெட் சமரில் 12 வருடங்களுக்குப் பிறகு புனித தோமியர் கல்லூரி வெற்றி பெற்றது.  

தெற்காசிய விளையாட்டில் இலங்கைக்கு பெருமை சேர்த்த முஸ்லிம் வீராங்கனை சலிஹா

மற்ற துறைகளைப் போன்று விளையாட்டுத்துறையிலும் பெண்கள்…

ஏப்ரல் 

சீனாவில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சிரேஷ் பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் டிலங்க இசுரு குமார வெண்கலப்பதக்கம் வென்றார்.

கட்டாரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் முப்பாய்ச்சல் வீராங்கனை விதூஷா லக்ஷானி வெண்கலப் பதக்கம் வென்றார்.

மே 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன முதல்முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக பெயரிடப்பட்டார்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரியா, நுவன் சொய்ஸா, அவிஷ் குணவர்தன மற்றும் டில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோருக்கு எதிராக .சி.சியினால் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக சுனில் குணவர்தன நியமிக்கப்பட்டார்.

கொழும்பு றோயல் மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரிகளுக்கிடையில் 75ஆவது ஆண்டாக நடைபெற்ற பிரெட்பி கேடய றக்பி கிண்ணத்தை 34ஆவது முறையாக கொழும்பு றோயல் கல்லூரி தம்வசமாக்கியது.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் மற்றும்…

ஜூன் 

இலங்கையின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையாக அனூஷா கொடித்துவக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, சம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணியை (லீக் சுற்றில்) வீழ்த்தியிருந்ததுடன், போட்டித் தொடரில் 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான ஆசிய வலய தகுதிகாண் போட்டியின் ஓர் அங்கமாக, மக்காவோவுக்கு எதிராக அவர்களது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை 1க்கு 0 என வீழ்ந்தது.

உலக மெய்வல்லுனர் விளையாட்டின் தாய் வீடாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய பெயரும், குறியீடும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஜூலை

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் உலக சாதனை படைத்தார். எனினும், 16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 15ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றுக் கொண்டது.

உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் அரங்கிலிருந்து இலங்கையின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஓய்வு பெற்றதுடன், மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு விடைகொடுத்தார்.

தியகமவில் நடைபெற்ற 14ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-4 என்ற ஓட்டங்கள் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியது

ஆகஸ்ட் 

சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையக வீரரான மாதவன் ராஜகுமார் வெண்லகப் பதக்கத்தை வெற்றி கொண்டார்

சர்வதேச பொலிஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இலங்கை பொலிஸ் கழக அணி சம்பியனாகத் தெரிவாகியது.

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டித் தொடரில் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக்க ஹத்துருசிங்க நீக்கப்பட்டு ருமேஷ் ரத்நாயக்க இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக ஐ.சி.சியினால் குற்றம் சுமத்தப்பட்டது.

97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நிமாலி லியனாரச்சி, லக்ஷிகா சுகன்தி, விதூஷா லக்ஷானி ஆகியோர் இலங்கை சாதனைகளை நிகழ்த்தினர்

செப்டெம்பர்

இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆசிய எழுவர் றக்பி தொடரில் 3 கட்டங்கள் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணி 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

முறையற்ற பந்துவீச்சுப் பாணி காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு, ஓர் ஆண்டுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச .சி.சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

1000 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதாக இலங்கை நடத்தப்படும் எஸ்.எல்.டி ஸ்பீட் அப் சைக்கிளோட்டத்தின் சம்பியனாக சாமிக்க சதுன் தெரிவானார்.

தேசிய விளையாட்டு விழா கராத்தே தோ போட்டிகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜ் பாலுராஜ் தொடர்ச்சியாக 8ஆவது தடவையாக தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்

இலங்கை மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான சமரி அத்தபத்து மகளிருக்கான டி20 போட்டிகளில் சதமடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்

கால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ

பாடசாலையின் இடைவெளி நேரங்களில் மாணவர்கள் பல விளையாட்டுக்களில்…

ஒக்டோபர்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர் தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை ஹிருனி விஜேரத்ன, அதிக வெப்பம் மற்றும் களைப்பு காரணமாக இடைநடுவில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்

நேபாளத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட தெற்காசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக இலங்கை அணி முடிசூடிக் கொண்டது.

பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்ற 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 99 தங்கப் பதக்கங்களை வென்ற மேல் மாகாணம் சம்பியனாகத் தெரிவாகியது

இலங்கையின் உயரம் பாய்தல் சம்பியனான மஞ்சுள குமார, சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து விடைபெற்றார்

தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான விஜயபாஸ்கர் ஆர்ஷிகா, 3 போட்டிச் சாதனைகள் மற்றும் ஒரு தேசிய விளையாட்டு விழா சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்

45 வருடகால தேசிய பெரு விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டிகள் வரலாற்றில் முதல்தடவயாக கிழக்கு மாகாணம் சார்பாக கிரிஜா பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  

நவம்பர்

ஜேர்மனியில் தொழில்முறை கால்பந்து வீரரான விளையாடிவரும் இலங்கையைச் சேர்ந்த வசீம் ராசிக், தேசிய கால்பந்து அணியுடன் முதல்தடவையாக இணைந்து கொண்டார்.

உலக உடற்கட்டழகர் சம்மேளனம் ஏற்பாடு செய்த 73ஆவது உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட மலையகத்தைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்

சூதாட்டத்தைத் தடுக்கும் விசேட சட்டமூலம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உலக பரா மெய்வல்லுனரில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான தினேஷ் ப்ரியன்த வெள்ளிப் பதக்கம் வென்றார்

இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு அளப்பெரிய சேவையாற்றிய யோகானந்த விஜேசுந்தர காலமானார்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பிறகு புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும பொறுப்பேற்றார்

தெற்காசியாவின் நீச்சல் நாயகன் மெத்தியூ அபேசிங்க

இலங்கையில் கிரிக்கெட்டுக்கு, கால்பந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம்…

டிசம்பர்

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைக்கால தடைவிதிக்கப்பட்ட இலங்கையின் மெய்வல்லுனர் வீரர் காலிங்க குமாரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால் அவருக்கு விதிக்கப்பட்ட தடை இரத்து செய்யப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பெண்களுக்கான பிக் பேஷ்  கிரிக்கெட் போட்டியில் மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணியுடன் இலங்கை மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை சமரி அத்தபத்து இணைந்து கொண்டார்.

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி 40 தங்கம், 83 வெள்ளி மற்றும் 128 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கராத்தே காடா தனிநபர் பிரிவில் களமிறங்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் வட மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆர்ஷிக்கா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தெற்காசிய மெய்வல்லுனர் அரங்கை கலக்கிய தங்க மகள் டில்ஷி

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில்…

மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் சப்ரின் அஹமட் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார்

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் ஆகிய கிரிக்கெட் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

19 வயதுக்குட்பட்ட ஆசிய றக்பி கிண்ண தொடரின் முதல் பிரிவுக்கான சம்பியனாக இலங்கை அணி தெரிவாகியது.

10 வருடங்களுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இலங்கையின் முதல்நிலை ஸ்குவாஷ் வீராங்கனையான பாத்திமா சலிஹா இஸ்ஸடீன், தேசிய ஸ்குவாஷ் சம்பியன் பட்டத்தை முதல்தடவையாக வென்று அசத்தினார்.

தேசிய கரப்பந்தாட்டத் தொடரில் ஆடவர் பிரிவில் சம்பியனாக இலங்கை இராணுவமும், மகளிர் பிரிவில் சம்பியாக இலங்கை விமானப்படை அணியும் தெரிவாகின

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<