சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 20 வயதின்கீழ் அணி

233

20 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடருக்கு தம்மை தயார்படுத்தும் வகையில் இலங்கை 20 வயதின் கீழ் அணி தமது இரண்டாவது பயிற்சி போட்டியை சீ ஹோக்ஸ் அணிக்கு எதிராக வெலிசரை கடற்படை மைதானத்தில் விளையாடியது. 

இந்த போட்டியில் இலங்கை 20 வயதின்கீழ் அணி சீ ஹோக்ஸ் அணிக்கு எதிராக 1 – 0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. முதலாம் பாதி நிறைவில் இவ்விரு அணிகளும் எந்த கோலும் அடிக்காத நிலையில், 80ஆவது நிமிடத்தில் சீ ஹோக்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மொஹமட் குர்ஷீத் கோலாக்கியதால் அவ்வணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் முந்தைய போட்டியை விட சிறந்த மேம்படுத்தப்பட்ட ஆட்டத்தை இலங்கை 20 வயதின் கீழ் அணி வெளிப்படுத்தியது. கடந்த பயிற்சி போட்டியை விட, இப்போட்டியில்  இலங்கை 20 வயதின் கீழ் அணி எதிர்த்தாடிய  சீ ஹோக்ஸ் அணி மிகவும் பலம் பொருந்திய அணியாக காணப்பட்டது. சீ ஹோக்ஸ், 2021 இல் சுபர் லீக் தொடரை 2ஆம் இடத்தில் நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி குறித்து 20 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராஜமணி தேவசகாயம் கருத்து தெரிவிக்கையில்,

“நாம் தோல்வியடைந்துள்ளோம். ஆனால் எமது ஆட்டத்திறனை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். டிபெண்டெர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து இந்த போட்டியில் சிறந்த மேம்படுத்தப்பட்ட ஆட்டத்தை நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம். சீ ஹோக்ஸ் அணியானது மிகவும் பலம் பொருந்திய மற்றும் திறமையான அணி. நாம் சில வாய்ப்புக்களை உருவாக்கியிருந்தோம், எனினும் துரதிஷ்டவசமாக எம்மால் கோல் அடிக்க முடியவில்லை. எமது பின்களம் குறித்து நான் திருப்தியடைகிறேன், அனால் இன்னும் நாம் முன்னேற வேண்டும். டிபெண்டெர்ஸ்க்கு எதிரான கடந்த போட்டியை விட இப்போட்டியில் எமது முன்களம் சிறப்பாக செயற்பட்டது. ஆனால் நாம் கோலடிக்கும் நுட்பத்தில் இன்னும் முன்னேற வேண்டும்” என கூறினார்.

                              >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<