முதல் பயிற்சி போட்டியை சமன் செய்த இலங்கை 20 வயதின்கீழ் அணி

SAFF U20 2022

365
FFSL

கடந்த 16ஆம் திகதி பெத்தகான கால்பந்து பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற டிபெண்டர்ஸ் கால்பந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தை  இலங்கை 20 வயதின் கீழ் அணி 1 – 1 என சமனிலையில் நிறைவு செய்தது.

எதிர்வரும் ஜூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை இந்தியாவில் இடம்பெறவுள்ள தெற்காசிய 20 வயதிற்குட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடருக்கு இலங்கை அணியினரை தயார்படுத்தும் வகையிலேயே இந்த பயிற்சி போட்டி இடம்பெற்றது.  

ஆட்டத்தின் முதல் பாதி நிறைவில் இவ்விரு அணிகளும் எந்த கோல்களும் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதியின் அதிகமான நேரங்களுக்கும் கோல்கள் பெறப்படவில்லை. 

எனினும், இறுதி 10 நிமிடங்களுக்கு முன்னர் டிபெண்டர்ஸ் அணி கோல் ஒன்றினை அடித்தது. எனினும் இலங்கை 20 வயதின் கீழ் அணியினர் போட்டியின் இறுதி நிமிடங்களில் மீண்டு வந்து கோல் ஒன்றினை அடித்து, ஆட்டத்தை சமப்படுத்தினர். 

இப்போட்டி குறித்து 20 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராஜமணி தேவசகாயம் இவ்வாறு கூறினார்,

“இந்த போட்டியில் நான் நினைத்த எனது முதல் பதினொருவர் அணியையும், மாற்று வீரர்களையும் விளையாட முயற்சித்தேன். பெரும்பாலான வீரர்கள் 90 நிமிட போட்டியை பாடசாலை மட்டத்தில்  விளையாடவில்லை. பலம் பொருந்திய டிபெண்டர்ஸ் அணிக்கெதிராக நாம் விளையாடிய பின்னர், தெற்காசிய 20 வயதிற்குட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடரில் பிரகாசிக்க என்னிடம் சிறந்த அணி இருப்பதாக நான் உணர்கிறேன். 

இவ்வீரர்கள் வெவ்வேறு மாகாணங்கள், கழகங்கள் மற்றும் பாடசாலைகளை சேர்ந்தவர்கள். வித்தியாசமான பயிற்சிகளை பெற்று இங்கே அவர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் சேர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் சிறந்த அணி கட்டமைப்பை உருவாக்கலாம். அவர்கள் இப்போட்டியில் எனது திட்டத்தின் அடிப்படையில் விளயாடியமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எம்மை இன்னும் மேம்படுத்த இன்னும் இடம் உள்ளது. அதை நாம் எமது அடுத்த பயிற்சி போட்டியில் செய்வோம்” 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<