சுப்மன், தீப்தி, ரவி சாஸ்திரிக்கு BCCI இன் உயர் விருதுகள்

BCCI Awards 2024

56
BCCI Awards 2024

2022-23ஆம் ஆண்டின் பிசிசிஐ இன் சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருதை சுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனைக்கான விருதை தீப்தி சர்மாவும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் ஆகிய இருவருக்கும் ‘சி.கே.நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் இந்த விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படாமல் தடைப்பட்டநிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2019-20, 2020-21, 2021-22, 2022-23 முதலிய ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஹைதராபத்தில் நேற்று (23) இடம்பெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘சி.கே.நாயுடு’ விருது, ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவருக்கான ‘திலீப் சர்தேசாய்’ விருது, சிறந்த அறிமுக வீரருக்கான விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

மேலும், 2019-20ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது மொஹமட் ஷமிக்கும், 2020-21ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட்டன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த வீராங்கனைக்கான, நான்கு ஆண்டுகளுக்கான விருதை இரண்டு வீராங்கனைகள் இடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன்படி, சகலதுறை வீராங்கனை தீப்தி சர்மா 2019-20 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த வீராங்கனை விருதையும், ஸ்மிருதி மந்தனா 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச்சென்றனர்.

2019-20ஆம் ஆண்டுகளில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது மயங்க் அகர்வாலுக்கும், 2020-21ஆம் ஆண்டுக்கான விருது அக்ஷர் படேலுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் வழங்கப்பட்டது.

பெண்களுக்கான சிறந்த அறிமுக வீரருக்கான விருது 2019-20ஆம் ஆண்டுக்காக பிரியா புனியாவிற்கும், 2020-21 ஆண்டுக்காக ஷபாலி வர்மாவிற்கும், 2021-22 ஆண்டுக்காக ஷபினெனி மேகனாவிற்கும், 2022-23 ஆண்டுக்காக அமோஞ்சத் கவுருக்கும் வழங்கப்பட்டது.

இதனிடையே, 2022-23 சீசனில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகத் திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தீலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது.

அதிக ஓட்டங்கள் எடுத்த பெண்களுக்கான விருதுப் பட்டியலில் 2019-20க்கு பூனம் ராட்வுக்கும், 2020-21க்கு மிதாலி ராஜுவுக்கும், 2021-22க்கு ஹர்மன்பிரீத் கவுருக்கும், 2022-23க்கு ஜெமிமா ரோட்ரிக்ஸுவுக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல, ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீராங்கனைக்களுக்கான விருதுப் பட்டியலில் 2019-20க்கு பூனம் யாதவிற்கும், 2020-21க்கு ஜுலன் கோஸுவாமிக்கும், 2021-22க்கு ராஜேஸ்வரி கெய்க்வாட்டுக்கும், 2022-23க்கு தேவிகா வைத்யாவிற்கும் வழங்கப்பட்டது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<