பாடசாலை இடைவேளையை அதிகரிக்க விளை.துறை அமைச்சர் புது யோசனை

179
Sports Minister

பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமையை அதிகரிக்கவும், அவர்கள் கூடிய நேரம் விளையாட்டில் ஈடுபடுவதற்கும் பாடசாலையின் இடைவேளை நேரத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, தற்போது வழங்கப்படுகின்ற 15 நிமிடங்கள் இடைவேளையை அதிகரிக்க ஏனைய பாடங்களுக்கு வழங்கப்படுகின்ற நேரங்களில் இருந்து தலா 2 நிமிடங்கள் வீதம் குறைக்க முடியும் என்ற யோசனையொன்றையும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் நிர்மாணிக்கவுள்ள உடற்பயிற்சி மத்திய நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையை எடுத்துக் கொண்டால் விளையாட்டுக்கு அதிக கவனம் செலுத்தினால் கல்வி நடவடிக்கைகள் வீணாகி போய்விடும் என மாணவர்களைப் போல பெற்றோர்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்

>> தரம் 8 முதல் விளையாட்டுப் பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதி

இது தற்போது அவர்களது நம்பிக்கையாகவும் மாறிவிட்டது. அதுவொரு மூட நம்பிக்கை என்று தான் சொல்ல முடியும். விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துகின்ற மாணவர்கள் கல்வியிலும் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மறுபுறத்தில் புத்திசாலித்தனமான வீரர்கள் இல்லாமை இன்று விளையாட்டில் உள்ள மிகப் பெரிய சவாலாக உள்ளது. பயிற்சியாளர்கள் ஏதாவது ஒன்றை சொல்லிக் கொடுக்கும் போது அதை புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்க வேண்டும்

அதனால் வீரர்கள் புத்திசாலியாகவும், சொல்லிக் கொடுக்கின்ற விடயங்களை புரிந்துகொள்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும். இவற்றையயெல்லாம் ஆசிரியர்களும் நன்றாக ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்

>> பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

எனவே, பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இடைவேளைக்கான நேரத்தை 15 நிமிடங்களாக அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸிடம் நான் யோசனையொன்றை முன்வைத்தேன். இதற்காக ஒரு பாடத்துக்கான நேரத்தை நான் கேட்கவில்லை

எல்லா பாடங்களுக்குமான நேரங்களில் இருந்து தலா 2 நிமிடங்களைக் குறைத்து அதை இடைவேளையில் சேர்த்துக் கொண்டால் 18 நிமிடங்களை எடுக்கலாம். அந்த நேரத்தைப் பயன்படுத்தினால் இடைவேளையின் போது மாணவர்களுக்கு இன்னும் 2 அல்லது 3 ஓவர்கள் பந்துவீச முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இறுதியாக தமது பிள்ளைகளை மைதானங்களுக்கு அனுப்பி ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவதற்கு அனைத்து பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<