பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக 22.5 மில்லியன்களை வழங்கும் SLC

80

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் கலந்துகொள்ளும் இலங்கைக்கு 22.5 மில்லியன் ரூபா நிதியை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி டி சில்வாவுக்கும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கும் இடையில் நேற்று (02) விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த கலந்துரையாடலின் போது, தேசிய விளையாட்டு நிதியத்தின் ஊடாக மேலும் பல விளையாட்டு சங்கங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் மேலும் உறுதியளித்தார்.

இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நமது நாட்டில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த நிதியானது பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்கள் இவ்வாறான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுக்கு புகழைப் பெற்றுத் தருவார்கள் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர சமரவிக்ரம, இலங்கை கிரிக்கட் சபையின் உப பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இலங்கை அணிக்கு அனுசரணை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை முன்வந்தபோது, தேசிய ஒலிம்பிக் குழு அந்த நிதியை ஏற்க மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<