பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், இரண்டு முறை உலக சம்பியனுமான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை வீழ்த்தி, இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க செக் குடியரசில் நடைபெற்ற 65ஆவது கோல்டன் ஸ்பைக் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை தடகளப் போட்டிகளில் ருமேஷ் தரங்க வெல்லும் 6 ஆவது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவின் மிக மதிப்புமிக்க தடகளப் போட்டிகளில் ஒன்றான இந்த கோல்டன் ஸ்பைக் தொடரில், இதற்கு முன்னர் எந்தவொரு இலங்கை வீரரும் சம்பியன் பட்டம் வென்றதில்லை என்பதால், இந்த வெற்றி இலங்கை தடகள வரலாற்றில் ஒரு புதிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மைல்கல்லாகும்.
ஒஸ்ட்ராவா மெஸ்ட்ஸ்காய் மைதானத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தரங்க 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். இதில் முதலாவது முயற்சியில் 85.87 மீற்றர் தூரத்தையும், இரண்டாவது முயற்சியில் 86.30 மீற்றர் தூரத்தையும் பதிவுசெய்த ருமேஷ் தரங்க மூன்றாவது முயற்சியில் 86.57 மிற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெற்றியீட்டினார்.
இப்போட்டியில் கிரெனடாவின் அண்டர்சன் பீட்டர்ஸ் 84.27 மீற்றர் தூரத்தையும், தென்னாப்பிரிக்காவின் டோவ் ஸ்மித் 83.90 மீற்றர் தூரத்தையும் பதிவு செய்தனர்.
- ஈட்டி எறிதலில் புது சரித்திரம் படைத்தார் ருமேஷ் தரங்க
- ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்
- இலங்கை சாதனையை முறியடித்து உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ருமேஷ் தகுதி
இலங்கையின் வளர்ந்து வரும் தடகள நட்சத்திரமான ருமேஷ் தரங்க, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தடகளத் தொடர் ஒன்றில் இத்தகைய வெற்றியைப் பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சமீபகாலமாக சர்வதேச ஈட்டி எறிதல் அரங்கில் முன்னணி வீரராக உருவெடுத்துள்ள அவர், இந்த ஆண்டில் உலகின் சிறந்த முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக நீண்ட தூர ஈட்டி எறிதல் பதிவுகளைத் தன் வசம் கொண்டு உலகளவில் முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில், ருமேஷ் தரங்க 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினார். இது 2026 ஆம் ஆண்டின் தடகளப் பருவத்தில் உலகளவில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட தூர ஈட்டி எறிதலாக உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இலங்கை தடகள வரலாற்றில் வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் உலக அளவில் இத்தகைய அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். நேற்று முன்தினம் அவர் வெளிப்படுத்திய திறமையின் அடிப்படையில், உலக தரவரிசையில் அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மற்றுமொரு மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.
இதனிடையே, இந்த வார இறுதியில் தோஹாவில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் ருமேஷ் தரங்க பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<






















