தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற வடக்கின் நட்சத்திரம் ஆர்ஷிகா

322
other sports

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகளுக்கு மேல் சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா, எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டார். 

இதன்படி, தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகள் வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுகின்ற முதல் தமிழ் வீராங்கனையாக அவர் இடம்பிடித்தார்

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் யாழ் கழக வீரர்கள் சாதனை

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால்………

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ளது

இதனை முன்னிட்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (03) விளையாட்டுத்துறை அமைச்சின் டொரிங்டன் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற முக்கிய போட்டிகளில் ஒன்றாக விளங்குகின்ற பளுதூக்கல் போட்டியில் அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பதக்கங்களை வென்று வருகின்ற பல முன்னணி வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்

இதன்படி, பலத்த போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த தகுதிகாண் போட்டியில் நான்கு தேசிய சாதனைகள் முறிடியக்கப்பட்டன

இதில் 2006இல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 37 வயதுடைய நட்சத்திர வீரரான சின்தன கீதால் விதானகே (81 கிலோ எடைப்பிரிவு), பெண்கள் பிரிவில் ஹன்சனி கோமஸ் (45 மற்றும் 49 கிலோ எடைப்பிரிவு), சமரி வர்ணகுலசூரிய (55 கிலோ எடைப்பிரிவு), மற்றும் திமாலி ஹப்புதென்ன (87 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் தத்தமது கிலோ எடைப்பிரிவுகளில் புதிய தேசிய சாதனை படைத்திருந்ததுடன், தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தினையும் பூர்த்தி செய்திருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை மாற்றுவதில் புதிய திருப்பம்

தற்போது இடம்பெற்று வரும் இலங்கை கிரிக்கெட்…….

இந்த நிலையில், யாழ். பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட யாழ். சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆர்ஷிகா, பெண்களுக்கான 64 மற்றும் 71 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குகொண்டு ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 95 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 171 கிலோ கிராம்) தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்

இந்த மொத்த எடையானது ஆர்ஷிகாவுக்கு தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான அடைவு மட்டத்துக்கு போதுமானதாக இருந்தது. இதனால், குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்

அண்மைக்காலமாக பளுதூக்கல் விளையாட்டில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலை மற்றும் திறந்த மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்ற வி. ஆர்ஷிகா, பெண்களுக்கான 64 கிலோ எடைப் பிரிவில் தற்போதைய தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்றார்

கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இவர் மூன்று புதிய தேசிய சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதனைத்தொடர்ந்து சுமார் 9 நாட்கள் இடைவெளியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் பங்குபற்றிய ஆர்ஷிகா, குறித்த எடைப் பிரிவில் போட்டியிட்டு தனது சொந்த சாதனையை மீண்டும் புதுப்பித்தார்

ஆசிய இளையோர் கரப்பந்தில் மியன்மாரை வீழ்த்திய இலங்கை

தற்பொழுது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட……..

இதேவேளை, இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் இறுதியாக நடைபெற்ற கனிஷ்ட, இளையோர், சிரேஷ்ட தேசிய பளுதூக்கல் போட்டிகளில் யாழ். பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட அவர், இளையோர் மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்ததுடன், பெண்கள் பிரிவில் அதிசிறந்த பளுதூக்கல் வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மாத இறுதியில் கேகாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் பங்குகொண்ட ஆர்ஷிகா, பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் மொத்தமாக 175 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன், பெண்கள் பிரிவில் அதிசிறந்த பளுதூக்கல் வீராங்கனைக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்

தனது அப்பாவின் வழிகாட்டலின் கீழ் 13ஆவது வயதிலிருந்து பளுதூக்கல் போட்டிகளில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்ற பாடசாலை மாணவியான வி. ஆர்ஷிகா, வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக (2014 முதல் 2019 வரை) தங்கப் பதக்கங்களை வென்று வருகின்ற ஒரேயொரு வீராங்கனையாகயும், குறித்த காலப்பகுதியில் பாடசாலை மற்றும் திறந்த மட்டப் போட்டிகளில் 9 தடவைகள் சாதனைகளை முறியடித்தவராகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

இதுஇவ்வாறிருக்க, தனது வெற்றி குறித்து வி. ஆர்ஷிகா கருத்து வெளியிடுகையில், “தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள காரணமாக இருந்த எனது அப்பாவும், பயிற்சியாளரருமான விஜயபாஸ்கருக்கும், எனது அம்மா, அண்ணா மற்றும் எனது பாடசாலைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் இன்னும் பல வெற்றிகளையீட்டி வட மாகாணத்துக்கும் இலங்கைக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன” என அவர் தெரிவித்தார்

ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் ராஜகுமாரனுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் ஹேர்பின் நகரில் நடைபெற்ற …….

எனவே, தனது அப்பாவின் ஆலோசனை, வழிகாட்டல் மற்றும் விடா முயற்சி, அர்ப்பணிப்பின் காரணமாக இன்று வட மாகாணத்துக்கு மாத்திரமல்லாது முழு இலங்கைக்கும் பெருமையைத் தேடிக் கொடுத்து வருகின்ற வி. ஆர்ஷிகா இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு பதக்கமொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையளத்தளமான ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

இதுஇவ்வாறிருக்க, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள பளுதூக்கல் வீரர்கள் தொடர்பான இறுதி அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இருந்து தலா ஏழு வீர வீராங்கனைகளை தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்வதற்கு இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, வி, ஆர்ஷிகாவும் தகுதிகாண் போட்டியில் தனது திறமைகளை வெளிப்படுத்தி அதற்கான அடைவு மட்டத்தினைப் பூர்த்தி செய்துள்ளதால் அவருக்கும் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<