சூரியவௌ மைதானத்தில் நேற்று (06) நடைபெற்ற இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், 321 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை மிகச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் விரட்டியடித்த இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் துடுப்பாட்ட பலத்தையும் பறைசாற்றிய இந்த விறுவிறுப்பான போட்டியில், இலங்கை அணி நிர்ணயித்த 320 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, 4 பந்துகள் மீதமிருக்கையில் 324 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
முன்னதாக நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 2ஆவது ஓவரில் துல்நித் சிகேராவின் (06) விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த போதிலும், செனுஜ வெக்குனாகொட மற்றும் கவிஜ கமகே ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் பலமான ஓட்டக் குவிப்பை நோக்கி நகர்ந்தது.
நிதானமாக விளையாடிய திமன்த மஹாவித்தான 42 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 4ஆவது விக்கெட்டுக்காக செனுஜ மற்றும் கவிஜ ஜோடி இணைந்து பெற்ற 100 ஓட்டங்கள் அணியை மீட்டெடுக்க பெரிதும் உதவியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய செனுஜ வெக்குனாகொட 111 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 91 ஓட்டங்களைக் குவித்தார்.
- இலங்கை அணியினை முதல்நாளில் பலப்படுத்திய உதார – மெண்டிஸ் ஜோடி
- இமாலய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்துடன் இரண்டாவது டெஸ்டில் இலங்கை
- இலங்கை வரும் இந்திய டெஸ்ட் அணி; போட்டி அட்டவணை வெளியீடு
மறுபுறம் அதிரடி காட்டிய கவிஜ கமகே வெறும் 70 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 77 ஓட்டங்களைப் பெற்று ஓட்ட வேகத்தை அதிகரித்தார். இறுதி நேரத்தில் சாமிக ஹீனட்டிகல ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 46 ஓட்டங்களையும், சமிந்து நெத்சர 11 பந்துகளில் 21 ஓட்டங்களையும் விளாச, இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியா சார்பாக பந்துவீச்சில் காவ்ய படேல் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோஹித் உல்வா மற்றும் ரோஹித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியின் ஆரம்பம் மிகச் சிறப்பாக அமைந்தது. அணித் தலைவர் யஷ்பர்தன் சௌஹான் 31 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 2ஆவது விக்கெட்டுக்காக இணைந்த சாகர் விர்க் மற்றும் லக்ஷ்யா ராய்சந்தானி ஜோடி 94 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை இலகுவாக்கியது. விர்க் 57 ஓட்டங்களையும் (75 பந்துகள்), ராய்சந்தானி 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
எனினும், போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது குஷாக்ரா ஓஜாவின் அதிரடி ஆட்டமே ஆகும். வெறும் 67 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் அவர் விளாசிய 92 ஓட்டங்கள், போட்டியின் போக்கை முழுமையாக இந்தியாவின் பக்கம் திருப்பியது.
இலங்கை அணி சார்பாக கவிஜ கமகே மற்றும் செத்மிக செனவிரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இறுதி நேரத்தில் நெருக்கடி கொடுத்த போதிலும், பதற்றமின்றி விளையாடிய இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
அதற்கமைய, வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய இளையோர் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (06) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















