ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நேற்று (13) நடைபெற்ற அங்குரார்ப்பண உலக தடகள ‘அல்டிமேட் சம்பியன்ஷிப்’ (World Athletics Ultimate Championship) தொடரில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 91.09 மீற்றர் தூரத்திற்குப் ஈட்டியை எறிந்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சம்பியன் பட்டத்தை வென்றார்.
போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்று, 4 சுற்றுகளாகக் மட்ப்படுத்தப்பட்டிருந்த ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி 8 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் ருமேஷ் தரங்க தனது முதல் முயற்சியில் 75.89 மீற்றரையும், இரண்டாவது முயற்சியில் 85.69 மீற்றரையும் பதிவு செய்தார். தனது மூன்றாவது முயற்சியில் 87.11 மீற்றரைப் பதிவு செய்து முன்னிலை பெற்ற அவர், இறுதி முயற்சியில் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக 90 மீற்றர் எல்லையைக் கடந்து தனது வெற்றியை உறுதி செய்தார்.
- டயமண்ட் லீக் நாயகனாக முடிசூடினார் ருமேஷ் தரங்க
- சூரிச் டயமண்ட் லீக்கிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க
முன்னதாக இவர், இந்த ஆண்டு நடைபெற்ற ரோம் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் 92.62 மீற்றர் தூரத்தை எறிந்து போட்டி சாதனையுடன் இலங்கையின் தேசிய சாதனையை முறியடித்ததுடன், சூரிச்சில் நடைபெற்ற போட்டியில் 92.07 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தார்.
இப்போட்டியில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தையும், ஜேர்மனியின் ஜூலியன் வெபர் 85.89 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். 2025 உலக சம்பியனான கென்யாவின் ஜூலியஸ் யேகோ 82.41 மீற்றருடன் 4 ஆம் இடத்தைப் பிடித்ததுடன், ஒலிம்பிக் சம்பியனான பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 81.49 மீற்றருடன் 5 ஆம் இடத்தைப் பிடித்தார்.
தடகள வரலாற்றிலேயே மிக அதிகப்படியான 10 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்தப் பரிசுத்தொகை வழங்கப்பட்ட இப்போட்டித் தொடரில், முதலிடம் பிடித்த ருமேஷ் தரங்கவிற்குச் சிறப்பு ‘அல்டிமேட்’ கேடயத்துடன் 150,000 அமெரிக்க டொலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இது இலங்கை பணப்பெறுமதியில் கிட்டத்தட்ட 6 கோடி இலங்கை ரூபாவாகும்.
இந்தப் போட்டித் தொடரையடுத்து நாடு திரும்பும் ருமேஷ் தரங்க எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க ஜப்பான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<






















