எதிரணிக்கு சவாலாக இருக்கும் அகிலவின் மாய சுழல்

1046

பல்லேகலை மைதானத்தில் கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரின் போது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபல்யமிக்க கிரிக்கெட் எழுத்தாளரான தமிந்த விஜேயசூரிய, அகில தனஞ்சயவிடம் அவரது பந்துவீச்சுப் பாணியை விபரிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இதற்கு எந்தவித சலனமுமின்றி பதில் தந்த தனஞ்சய அவரை “மாய சுழல் வீரர்” என கூறியிருந்தார்.

அகில தனஞ்சய தான் சொல்லிய வார்த்தைகளை சற்று கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாய சுழல் வீரர்கள் என உலகிற்கு அறிமுகமாகிய ஜெக் ஐவர்சன், ஜோன் க்ளிசன் மற்றும் அஜந்த மென்டிஸ் ஆகியோர் குறிப்பிட்ட காலத்திற்கே கிரிக்கெட் உலகில் தலை காட்டியிருந்தனர்.

மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு

வீடியோ பகுப்பு தொழில் நுட்பம் (Video Analysis) அதி உன்னத வளர்ச்சியை காட்டியிருக்கும் இந்த காலகட்டத்தில் எதிரணிகள் மாய சுழல் வீரர்களின் தந்திரங்களை இலகுவாக கண்டுபிடிப்பதால், மாய சுழல் வீரர்கள் மறைந்து போகின்றனர். இதன்படி மாய சுழல் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அணிகளுக்கு தீர்வாக உள்ளனர். எனினும், உண்மை என்னவெனில் அகில தனஞ்சய மாய சுழல் வீரர் என்பதை விட அதற்கும் மேலாக சிலவற்றை தன்னிடம் வைத்திருக்கின்றார்.

வேறு விதமான ஒரு மாய சுழல் வீரராக இருக்கும் அகில தனஞ்சய அவர் வீசும் ஓப் ஸ்பின் பந்தையும் (Off Spin), ஸ்டோக் பந்தையும் (Stock Delivery) மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வகையான பந்துகள் மூலமே அகில அதிக விக்கெட்டுக்களை எடுக்கின்றார்.  

அஜந்த மென்டிஸ் தான் அறிமுகமாகிய காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவராக அமைந்திருந்தார். ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட்டுக்களை சாய்த்து அசத்திய மென்டிஸ் அதனை அடுத்து இரண்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணியை நிர்மூலம் செய்தார். பலம் மிக்க துடுப்பாட்ட வீரர்களான ஷேவாக், டிராவிட், டெண்டுல்கார், கங்குலி மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் மென்டிஸின் சுழலுக்கு இரையாகியிருந்தனர். இதேநேரம், மெண்டிஸ் தான் அறிமுகமாகிய குறிப்பிட்ட அந்த டெஸ்ட் தொடரில், 26 விக்கெட்டுக்களை மொத்தமாக கைப்பற்றி அறிமுக டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்னும் உலக சாதனையையும் நிலைநாட்டியிருந்தார்.

மென்டிஸின் இந்த உலக சாதனை 60 வருடங்கள் நிலைத்திருந்த அலெக்ஸ் பெட்ஸ்டெரின் உலக சாதனையை தகர்த்தே பெறப்பட்டிருந்தது. முரளி ஸ்டோக் பந்துகளை வீசுவதில் தன்னுடைய திறனை நேர்த்தியாக பேணி வந்தார். எனினும், அஜந்த மென்டிஸ் இப்படியாக இருப்பதில் தவறுவிட்டிருந்தார். அத்தோடு மென்டிஸினால் சிறந்த முறையில் களத்தடுப்பு செய்ய முடியாது போயிருந்ததுடன், மெண்டிஸின் துடுப்பாட்டமும் மோசமாக அமைந்திருந்தது.

ஆனால், அகில தனஞ்சய வித்தியாசமானவர். கடந்த ஆண்டுகளில் ஸ்டோக் பந்துகளை (Stock Delivery) நேர்த்தியாக வீச திறமைகளை வளர்த்துக் கொண்ட அவர் துடுப்பாட்டத்தினையும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்  இதேநேரம், அகில ஒரு மோசமான களத்தடுப்பாளரும் இல்லை.

இதே நேரம் லெக் ஸ்பின் (Leg Spin) பந்துகளையும், கூக்லி (Googly) பந்துகளையும் வீசும் ஆற்றல் கொண்டுள்ள அகில தனஞ்சய மிக முக்கியமாக இந்த வகையான பந்துகளை திருத்தமாக போடுவதில் அதிக கவனமும் செலுத்துகின்றார். அகிலவின் கூக்லி பந்துகளில் அதிக பிடியெடுப்பு வாய்ப்புக்கள் உருவாகுவதுடன், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இப்படியான பந்துகளை எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் ஆபத்தில் மாட்டிக்கொள்கின்றனர்.

SLC T-20 லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு 20 இலட்சம் பணப்பரிசு

துடுப்பாட்ட வீரர்களுக்கு அகிலவிடம் இருந்து இன்னுமொரு மோசமான செய்தி வருகின்றது. அகில தற்போது கரம் பந்து (Carrom Ball) வீசுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். கரம் பந்தானது, கட்டை விரலையும் நடுவிரலையும் மாத்திரம் பயன்படுத்தி வீசப்படும் ஒரு பந்து வீச்சு வகையாகும். இது 1950 ஆம் ஆண்டுகளில் முதல் தடவையாக அவுஸ்திரேலிய அணியின் ஜேக் ஐவர்சனினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களது போர்க் கவசங்களில் ஒன்றாக கரம் பந்தினை பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் அடிக்கடி கரம் பந்துவீச்சு முறையை பயன்படுத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில தனஞ்சய தென்னாபிரிக்க அணியுடனான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்தது, ஒரு நாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சிறந்த பந்துவீச்சு என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சாக கயானாவில் வைத்து மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன் 27 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியது அமைந்திருந்தது. இதை வைத்து பார்க்கும் போது அகில தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சினை மயிரிழையிலேயே தவறவிட்டிருக்கின்றார். அகிலவின் அதிரடியான பந்துவீச்சினால் தென்னாபிரிக்க அணி 178 ஓட்டங்களால் படுதோல்வியடைந்து, ஒரு நாள் போட்டிகளில் அவர்களது மூன்றாவது மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் 20 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட அதி சிறந்த பந்துவீச்சாகும். குறித்த போட்டியில், அகில மெதிவ்ஸின் சாதனையை இலகுவாக முறியடிக்கும் ஒரு வாய்ப்பும் உருவாகியிருந்தது.

உலக கிண்ணத்தில் இலங்கை அணிக்காக, பிரதானமாக விக்கெட்டுக்களை கைப்பற்றும் சுழல் வீரராக அகில தனஞ்சயவை எதிர்பார்க்க முடியும். இருந்த போதிலும் எமக்கு இங்கிலாந்து மைதானங்கள் (குறிப்பாக ஜூன் மாதத்தில்) சுழல் வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என இலகுவில் கூறிவிட முடியாது. ஆனாலும்,  தனது சட்டைப் பைக்குள் தந்திரங்கள் வைத்திருக்கும் அகில எதிரணி வீரர்களுக்கு எப்போதும் சவாலான ஒருவராகவே இருப்பார்.

எனினும், ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்றுத் தந்த ஒருவரை மட்டும் நம்பி இருந்துவிட முடியுமா? எமது நாட்டில் நேர்த்தியான துரித வேகத்தில் பந்துவீசும் ககிஸோ றபாடாவோ அல்லது ஸ்விங் மூலமும், துரிதமான வேகம் மூலமும் எதிரணியின் துடுப்பாட்ட வீரரை திக்கு முக்காட செய்யும் மிச்செல் ஸ்டார்க்கோ இல்லை. எனவே, இதற்கு தீர்வு துடுப்பாட்ட வீரர்களை குழப்பும் இன்னொரு சுழல் வீரரை வைத்திருப்பது தான்.

இப்படியான ஒரு சுழல் வீரரை தேடும் போது, அது லக்ஷான் சந்தகனாக இருப்பதை உங்களால் இனங்காண முடியும். இடதுகை மணிக்கட்டு சுழல் வீரரான சந்தகன், அண்மைய தென்னாபிரிக்க அணியுடனான T20 போட்டியின் போது அகிலவை விட சிறப்பாக செயற்பட்டிருந்தார். அதாவது ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி குறித்த ஓவரை ஓட்டமற்ற (Maiden) ஓவராகவும் மாற்றியிருந்தார். எனினும், சந்தகன் தனது சுழலில் நேர்த்தியை சில இடங்களில் தவறவிடுகின்றார்.

T20 போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் நான்கு ஓவர்களை மாத்திரம் வீசுவதால், துடுப்பாட்ட வீரர்கள் பந்துவீச்சாளரை படித்து எடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். ஆனாலும், ஒரு நாள் போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவர் பத்து ஓவர்களை வீசுவதால் இந்நிலை மாறுகின்றது. அதாவது ஒரு நாள் போட்டிகளில் உங்களது பந்துவீச்சு நுணுக்கங்களை ஒளித்து வைக்க முடியாது.

இந்த விடயத்தினாலேயே ஒரு நாள் போட்டிகளில் ஜொலிக்கும் இந்தியாவின் இடதுகை மணிக்கட்டு சுழல் வீரரான குல்தீப் யாதவ்விற்கு டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்க முடியாமல் இருக்கின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் – ஐ.சி.சி இடையில் ஆகஸ்ட் 28இல் விசேட சந்திப்பு

எனினும், சந்தகன் தன் திறமைகளை இன்னும் வளர்த்துக் கொள்வாராயின் அவரினால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வெற்றிகரமான ஒருவராக வலம் வர முடியும்.

அதேநேரம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் கிடைக்கப் போகும் அனுபவம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்கவுக்கு தனது தரப்பை எந்தக் கோணத்தில் தயார்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை கொடுக்க கூடியதாக இருக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<