சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்கான முதல் அழைப்பு இந்தியாவிடம் கையளிப்பு

3092

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சுதந்திரக் கிண்ணம்’ (நிதஹஸ் குசலான) முத்தரப்பு T-20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இலங்கை T-20 அணியின் தலைவர் திஸர பெரோ நேற்றுமுன்தினம் விடுத்திருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட……

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற இவ்விசேட நிகழ்வின் போது குறித்த தொடருக்கான உத்தியோகபூர்வ காணொளி, இலட்சிணை என்பன வெளியிடப்பட்டதுடன், இரு அணிகளின் தலைவர்களும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றையும் இதன்போது ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு T20 தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடருக்கான கூட்டு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மூன்று நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபை, இப்போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணையை கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி வெளியிட்டது.

7 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இந்நிலையில், சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடர் குறித்து கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கையில், ”70 வருடங்கள் என்பது மிகப் பெரிய பயணம். அந்த வெற்றிப் பயணத்தை மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவது முக்கியமானது. எனவே இப்பயணத்தில் எமக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் விளங்கியதுடன், அந்த நாடுகள் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த தொடரானது முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளதுடன், எதிர்கால கிரிக்கெட்டில் முன்னேற்றகரமான நல்ல விடயங்கள் இடம்பெறுவதற்கும் இது உதவியாக இருக்கும்” என்றார்.

இந்நிலையில், இலங்கை T-20 அணியின் தலைவர் திஸர பெரேரா கருத்து வெளியிடுகையில், ”பெரும்பாலான ஆசிய நாடுகள் பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து கடுமையாகப் போராடித்தான் சுதந்திரம் பெற்றுக்கொண்டன. எனவே, எமது அண்டைய நாட்டு சகோதரர்களான இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரில் கலந்துகொள்வது எமக்கு பெருமை அளிக்கின்றது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுதந்திரக் கிண்ணத்துக்கான முதலாவது அழைப்பிதழை இந்திய அணிக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இம்முறை ஆஷஸ் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2017/2018 பருவகாலத்திற்கான …….

இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், ”இலங்கை அணியின் அழைப்பிதழை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன், இத்தொடரில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

அத்துடன், இந்த தொடரில் கலந்து கொள்வது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ராகுல் ஜோர்ஹி கருத்து வெளியிடுகையில் ”இலங்கையின் 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறப்புரிமை பெற்றவர்களில் நாங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவுள்ளோம். இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால இந்த யோசனையை முன்வைத்த உடனேயே நாம் அதை ஏற்றுக்கொண்டோம். உண்மையில் இலங்கைக்கு இந்தியாவை விட சிறந்த நண்பர் வேறு யாரும் இருக்க முடியாது” என்றார்.

முன்னதாக, இலங்கையின் 50ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1998ஆம் ஆண்டு சுதந்திரக் கிண்ணம் என்ற பெயரில் முதற்தடவையாக கிரிக்கெட் தொடரொன்று தற்போதைய கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கமைய ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்றிருந்தன. அதன் இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை 6 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், 1997ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.