அறிமுக வீரரின் அசத்தலில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

445
©Cricinfo

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று (03) நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக கடந்த பருவகாலத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் பிரகாசித்த வேகப் பந்து வீச்சாளர் நவ்தீப் ஷைனி அறிமுக வீரராக களமிறங்கியிருந்தது  போட்டியின் விஷேட அம்சமாகும். 

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை மாற்றுவதில் புதிய திருப்பம்

தற்போது இடம்பெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி குழுவினர் தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக…

மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜோன் கெம்ப்பல் மற்றும் எவின் லுவிஸ் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து ஆரம்பத்திலேயே ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து நிகொலொஸ் புராண் மற்றும் கிரோன் பொல்லார்ட் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முயன்ற போதும் நிகொலொஸ் புராண் 20 ஓடங்களுடன் ஆட்டமிழந்ததுடன் அடுத்து களமிறங்கிய சிம்ரோன் ஹிட்மேயர் வந்த வேகத்திலே ஆட்டமிழக்க அறிமுக வீரர் நவ்தீப் ஷைனி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். 

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக அதிக பட்சமாக கிரோன் பொல்லார்ட் 49 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் நவ்தீப் ஷைனி 3, புவனேஷ்வர் குமார் 2 மற்றும் ஏனைய நான்கு பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

96 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிக்கர் தவாண் ஒரு ஓட்டத்துடனும் மத்திய வரிசையில்  ரிஷாப் பான்ட் ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் குறைந்த ஓட்ட வெற்றி இலக்கு என்பதனால் ஏனைய வீரர்களின் பங்களிப்புக்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தது. 

இந்திய அணி சார்பாக அதிபட்ச ஓட்ட எண்ணிக்கையான 24 ஓட்டங்களை ரோகித் சர்மா பெற்றிருந்ததுடன் விராட் கோஹ்லி மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் தலா 19 ஓட்டங்களை பெற்றிருந்தனர். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சுனில் நரேன் , செல்டன் கொட்ரல் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

ஆஷஸ் – விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி

‘1882 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஓவலில் உயிர் நீத்த இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் ஆழ்ந்த அனுதாபங்களுட…

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய நவ்தீப் ஷைனி தெரிவாகியிருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 சர்வதேச போட்டி இன்று  (04) நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 95/9 (20) – கிரோன் பொல்லார்ட் 49, நிகொலொஸ் புராண் 20, நவ்தீப் ஷைனி 17/3, புவனேஷ்வர் குமார் 19/2

இந்தியா – 98/6 (17.2) – ரோஹித் சர்மா 24, மனிஷ் பாண்டே 19, விராட் கோஹ்லி 19, சுனில் நரேன் 14/2, செல்டன் கொட்ரல் 20/2

முடிவு – இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<