ஆஷஸ் – விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி

694

‘1882 ஆகஸ்ட் 29 ஆம் திகதி

ஓவலில் உயிர் நீத்த

இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு

நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின்

ஆழ்ந்த அனுதாபங்களுடன்

பாசமிகு நினைவுகள்.

உடல் தகனம் செய்யப்பட்டு அதன் சாம்பல்

அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படும்’

 

லண்டன் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இப்படித் தோற்றுவிடும் என்று ரசிகர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. 1882 ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமான அந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 63 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை 101 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்ததற்கு வேகப்பந்து வீச்சாளர் பெட்ரிக் ஸ்பொபத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும். அப்போது அவர் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் மோதலாக ஆஷஸ் தொடர் ஆரம்பம்

கிரிக்கெட் உலகில் சிறப்பு வாய்ந்த ஆஷஸ் எனப்படும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பாரிய எதிர்பார்ப்பு

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 122 ஓட்டங்களையே பெற்றது. 

ஆனால் 85 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட வந்த இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஒருமுறை தலையிடி கொடுத்த ஸ்பொபத் 7 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து முதல் முறை தனது சொந்த மண்ணில் தோற்று வெட்கித் தலைகுனிந்தது. இங்கிலாந்து பத்திரிகைகள் கவிதைகளாலும், செய்திகளாலும் பக்கம் பக்கமாக திட்டித் தீர்த்தன. 

இதில் ‘தி ஸ்போர்டிங் டைம்ஸ்’ (The Sporting Times) பத்திரிகை இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மரண அறிவித்தலையே வெளியிட்டது. அது தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் ஆரம்பம்.

சாம்பலை திரும்பப் பெற்ற இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் தனது சொந்த நாட்டில் அத்தனை இழிவுக்கு உள்ளான நிலையில் இழந்த கௌரவத்தை திரும்பப் பெறும் வைராக்கியத்துடனேயே அந்த ஆண்டு குளிர் காலத்தில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இவான் பிலிக் தலைமையிலான இங்கிலாந்து அணி கூறியது போலவே மூன்று போட்டிகளைக் கொண்ட (1882/83) தொடரை 2-1 என வெற்றி பெற்று, முதலாவது ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றியது. 

ஆஷஸ் என்ற ஆங்கிலப் பதத்தின் பொருள் சாம்பல் என்பதாகும். சாம்பல் என்றெல்லாம் விளையாட்டுப் போட்டிக்கு பெயர் வைப்பார்களா என்று நினைக்க வேண்டாம். அந்தப் பெயரில் தான் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பெருமையே தங்கி இருக்கிறது. 

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அந்தச் சுற்றுப் பயணத்தில் வேறு நட்புறவுப் போட்டிகளிலும் விளையாடியது. கிறிஸ்மஸுக்கு முன்னர் மெல்போர்னில் இடம்பெற்ற அவ்வாறான போட்டி ஒன்றில் அணித்தலைவர் இவான் பிலிக்கிற்கு அடையாளமாக சாம்பல் நிரப்பிய பழுப்பு நிற தாழி ஒன்று வழங்கப்பட்டது. அதனை வாசனை போத்தல் என்று கூறுவோரும் உண்டு. 

இந்த சிறிய போத்தல் இல்லையென்றால் தாழில் ஆறு வரிக் கவிதை ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. மெல்போர்ன் பன்ச் பத்திரிகையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பற்றி எழுதப்பட்ட கவிதை தான் அது. 

உண்மையில் இந்த போத்தலுக்குள் என்ன இருக்கிறது என்று ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. இதற்கு அணி வீரர் ஒருவரின் மனைவி சடங்கு முறையில் எரித்த ‘பெயில்’ ஒன்றின் சாம்பல் இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. 

வோர்னரை அநாகரிகமாக கிண்டல் செய்த இங்கிலாந்து ரசிகர்கள்

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் நாளான நேற்று அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரை…

எப்படி இருந்தாலும் இன்று ஆஷஸ் கிண்ணமாக மாறியிருப்பது இந்த சிறிய போத்தல் தான். ஒவ்வொரு முறை ஆஷஸ் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னர் இரு அணித் தலைவர்களுக்கும் பிடிக்க முடியாமல் பிடித்துக் கொண்டு புகைப்படங்களுக்கு காட்சி தருவதும், ஆஷஸ் கிண்ணத்தை வென்ற பின்னர் அணியினர் இரட்டை விரல்களால் பிடித்துக் கொண்டு கொண்டாடுவதும் இந்த போத்தலைத் தான்.

அதாவது விளையாட்டுப் போட்டி ஒன்றில் வழங்கப்படும் மிகச் சிறிய கிண்ணம் என்ற பெருமையும் இந்த ஆஷஸ் கிண்ணத்திற்கு இருக்கிறது. 

ஆனால் ஆஷஸ் தொடரின்போது வீரர்களுக்கு வழங்கப்படுவது உண்மையான கிண்ணம் அல்ல, அந்தக் குட்டிக் கிண்ணத்தின் நகல். உண்மையான கிண்ணம் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இருக்கும் எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் அதனை உண்மை என்று நம்பிய வீரர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். 2009 ஆஷஸை வென்ற இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிராம் ஸ்வான், அந்தக் கிண்ணத்தை எடுத்து மேலே தூக்கியபோது கீழ் பாகத்தில், ‘லோட்ஸ் கடை, 4,99 பௌண்ட்கள்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததை பார்த்து ஏமாந்து விட்டேன் என்று ஆவணப் படம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார். 

நூற்றாண்டு கடந்த இந்த ஆஷஸ் கிண்ண வரலாற்றில் தற்போது அந்தக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம் உள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடரை ஆஸி. அணி 4-0 என கைப்பற்றியது.  

இதுவரை நடந்திருக்கும் 70 ஆஷஸ் கிண்ண தொடர்களை பார்க்கும்போது இரு அணிகளும் சரிக்கு சமமாக போட்டியிட்டிருக்கின்றன. அதாவது அவுஸ்திரேலியா 33 தடவைகளும் இங்கிலாந்து 32 தடவைகளும் வெற்றி பெற்றிருப்பதோடு ஐந்து தொடர்கள் சமநிலை பெற்றுள்ளன.  

ஆனால் அண்மைய வரலாற்றில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் அதிகம். பச்சை தொப்பியுடன் களமிறங்கும் ஆஸி, 2013/2014 தொடரை 5-0 என வைட்வொஷ் செய்ததோடு 2006/07 இல் 4-0 என கைப்பற்றியது.  

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் மாறி மாறி நடைபெறும் இந்தத் தொடரில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவுஸ்திரேலியா 20 ஆண்டுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை மாற்றுவதில் புதிய திருப்பம்

தற்போது இடம்பெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி குழுவினர் தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பமாக…

இதனால் 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர் மிக பரபரப்புக் கொண்டதாக அமைந்தது. ஷேன் வோர்ன், பிளின்டொப், பீட்டர்ஸன், ஸ்ட்ரோஸ், ரிக்கி பொண்டிங்கின் வாக்குவாதங்களுக்கு மத்தியில் சூடு பறந்த அந்தத் தொடரில் இங்கிலாந்து தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஷஸ் கிண்ணத்தை வென்ற தருணம் இங்கிலாந்து கிரிக்கெட்டின் அண்மைய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். 

இங்கிலாந்து அணி கடந்த மாத ஆரம்பத்தில் முதல் முறை உலகக் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் இப்போது ஆஷஸ் தொடரில் களமிறங்கி உள்ளது. 

அணித்தலைவர் ஜோ ரூட் தொடக்கம் ஜோஷ் பட்லர், ஜேசன் ரோய், ஜொன்னி பெஸ்டோ, ஸ்டுவட் பிரோட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என்று இங்கிலாந்து படை பலமானது. அதற்கு நிகராக ஸ்டீபன் ஸ்மித், டேவிட் வோர்னர் முதற்கொண்டு அவுஸ்திரேலிய அணியும் சாதாரணமானது அல்ல. 

எனவே, விளையாட்டுக்கு அப்பால் ஆஷஸ் தொடர் என்பது கௌரவத்திற்கான போட்டியாக பார்க்க வேண்டி உள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<