ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்

Road to Tokyo Olympics

331

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அண்மையில் அறிவித்தது.

இதில் ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதியினை குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி மற்றும் துடுப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டனர்.

ஏனைய ஐந்து வீரர்களும் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பரிந்துரையில் வைல்ட் கார்ட் முறையில் ஒலிம்பிக் வாய்ப்பை பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்கேற்பு?

எனினும், இவ்வாறு அறிவிக்கப்பட்ட வீரர்களில் எந்தவொரு மெய்வல்லுனர்களும் இடம்பெறாமை மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதிபெறுவதற்கான கடைசி வாய்ப்பாக அமைந்த போட்டியாக, இம்மாத முற்பகுதியில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பில் நடைபெற்றது.

ஓலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கிய முன்னணி மெய்வல்லுனர் வீரர்கள் மாத்திரம் பங்குபற்றியிருந்த இந்தப் போட்டியில் எந்தவொரு வீரரும் எதிர்பார்த்தளவு தமது திறமையினை வெளிப்படுத்தவில்லை. இதற்கு போட்டிகள் நடைபெற்ற தினத்தன்று நிலவிய சீரற்ற காலநிலையும் முக்கிய காரணமாக அமைந்தது.  

இதில் பெண்களுக்கான 800 மீற்றரில் ஒலிம்பிக் அடைவுமட்டத்தினை நெருங்கிய டில்ஷி குமாரசிங்க போட்டியின் போது துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகினார். இதனால் அவரது ஒலிம்பிக் கனவு ஏமாற்றத்தில் முடிந்தது.

எதுஎவ்வாறாயினும், ஒலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கியுள்ள நான்கு மெய்வல்லுனர்களை ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஒலிம்பிக் செல்லும் இலங்கையர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

குறிப்பாக, ஜுன் மாதம் 19ஆம் திகதி கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் ஒலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கியுள்ள வீரர்களை பங்கேற்கச் செய்வதற்கான முயற்சியில் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

எனவே, இவ்வாறு ஒலிம்பிக் அடைவுட்டத்தை நெருங்கியுள்ள வீரர்கள் யார்? என்பது பற்றிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்

நிலானி ரத்நாயக்க

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க வீரர்களில் ஒருவராக விளங்கிய நிலானி ரத்நாயக்க பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டலில் முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.  

இதனால் உலக மெய்லல்லுனர் சங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நிலானி ரத்நாயக்க இரண்டு இடங்கள் முன்னேறி ஒலிம்பிக் தரவரிசைப்படி 32ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்

எதுஎவ்வாறாயினும், பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டலில் ஆசியாவைப் பொறுத்தமட்டில் பஹ்ரைன் வீராங்கனை வின்பிரெட் முடிலி யவி முதலிடத்திலும், இலங்கையின் நிலானி ரத்நாயக்க இரண்டாவது இடத்திலும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

திடீர் உபாதையினால் ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிடும் டில்ஷி

எனவே, தற்போதைய நிலைமையில் நிலானிக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைப்பது உறுதியாக இருந்தாலும், எதிர்கால போட்டி நிகழ்ச்சிகள் குறித்த நிச்சயமற்ற தன்மை அவரது ஒலிம்பிக் பயணத்துக்கு தடையாக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.  

ஏனெனில், ஒலிம்பிக்குக்கு தகுதிபெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் ஜுன் மாதம் 29ஆம் திகதி வரை ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பல சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன

எனினும், நிலானி ரத்நாயக்க போன்ற ஒலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கியுள்ள இலங்கை வீரர்களுக்கு இனி எந்தவொரு மெய்வல்லுனர் போட்டிகளும் இல்லை. இதனால் ஒலிம்பிக் அடைவுமட்டத்தை பெறமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டலில் 48 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களில் 19 பேர் 9 நிமிடங்கள் 30.00 செக்கன்கள் தூரத்தைக் கடந்த போட்டியாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எஞ்சியுள்ள வீரர்கள் உலக தரவரிசைப்படி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள்.

பெண்களுக்கான 800 மீற்றரில் இலங்கை சாதனை படைத்தார் டில்ஷி குமாரசிங்க

எனவே, ஒலிம்பிக் தகுதிக்கான காலக்கெடு முடிவதற்குள் நிலானி ரத்நாயக்கக்குக் கீழே தரவரிசையில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமேத ரணசிங்க

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் முன்னாள் தேசிய சம்பியனான வருண லக்‌ஷான் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுமேத ரணசிங்க இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், உலக தரவரிசையில் 41ஆவது இடத்தை சுமேத ரணசிங்க பெற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக ஒலிம்பிக் தகுதிபெறுவதற்கான புள்ளிகளைப் பெறும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.   

எதுஎவ்வாறாயினும், சுமேத ரணசிங்கவுக்கு இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபுன் அபேகோன்

இத்தாலியில் தற்போது பயிற்சிகளைப் பெற்று வருகின்ற யுபுன் அபேகோன் ஐரோப்பாவில் நடைபெறுகின்ற முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து பங்குபற்றி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

ஆண்களுக்கான 100 மீட்டரில் கடந்த செப்டம்பரம் மாதம் தேசிய சாதனை படைத்த அவர், ஒலிம்பிக் தரவரிசையில் 58ஆவது இடத்தில் உள்ளார்

காற்றின் வேகத்தினால் இலங்கை சாதனையை தவறவிட்டார் யுபுன்

முன்னதாக கடந்த வாரம் ஜேர்மனியில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.09 செக்கன்களில் ஓடிமுத்து தனது அதிசிறந்த நேரத்தைப் பதிவு செய்ததார்

எதுஎவ்வாறாயினும், இம்முறை ஒலிம்பிக்குக்கு நேரடித் தகுதியைப் பெற வேண்டுமானால் உலக தரவரிசையில் முதல் 56 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும்

இதனால் அடுத்து வரும் நாட்களில் ஐரோப்பாவில் நடைபெறுகின்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 2 புள்ளிகளைப் பெற்று டோக்கியோ ஒலிம்பிக்குக்கான தகுதியை யுபுன் அபேகோன் பெற்றுக்கொள்வவார் என எதிர்பார்க்ப்படுகின்றது

ஷான் திவங்க பெரேரா

அமெரிக்காவில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற இலங்கையின் உயரம் பாய்தல் சம்பியனான ஷான் திவங்க பெரேராரோட் டு ஒலிம்பிக்தரவரிசையில் 48ஆவது இடத்தில் உள்ளார்

எனினும், கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மிச்சிகனில் நடைபெற்ற பல்கலைகங்களுக்கிடையிலான டிவிஷன்-2 மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியருந்தார்.

பனிப் பொழிவு, கடும் குளிருக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த போட்டியில் 2.17 மீட்டர் உயரத்தைத் தாவி ஷான் பெரேரா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும் சீரற்ற காலநிலையால் 2.33 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது

உயரம் பாய்தலில் தெற்காசிய சாதனையை முறியடித்தார் உஷான் திவங்க

எதுஎவ்வாறாயினும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 32 வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு கிடைக்கவுள்ளது

எனவே, எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஷான் திவங்கவுக்கு எந்தவொரு போட்டிகளும் இல்லாத காரணத்தால் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியை இழந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதனால் ஷான் பெரேராவையும் கஸகஸ்தானில் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மெய்வல்லுனர் தொடரில் பங்குபற்றச் செய்வதற்கான முயற்சியில் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் களமிறங்கியுள்ளது

எனினும், கொரோனா வைரஸ் பரவரல் காரணமாக உஷான் திவங்கவுக்கு இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இலங்கை மெய்வல்லுனர் பங்குபற்றுவது இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆனால், இலங்கை மெய்வல்லுனர் சங்கம் இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக குறித்த வீரர்களை குறைந்தபட்சம் ஒரு சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடரிலாவது பங்குபற்றச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது