இந்திய அணியிலிருந்து வெளியேறும் தீபக் சஹார்!

South Africa tour of India 2022

225

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் வெளியேறியுள்ளார்.

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இலங்கையின் முதல் பயிற்சிப் போட்டி ஒத்திவைப்பு

முதல் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார், முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக (stiffness) அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தற்போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ள இவர் பெங்களூர் புறப்பட்டுச்சென்று அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவுள்ளார் என இந்திய கிரிக்கெட் அணியின் வைத்தியக்குழாம் அறிவித்துள்ளது.

தீபக் சஹார் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் வொசிங்டன் சுந்தர் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபக் சஹார் இந்திய T20 உலகக்கிண்ண குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா உபாதை காரணமாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

T20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி 14 வீரர்களுடன் சென்றுள்ள நிலையில், தென்னாபிரிக்க தொடரையடுத்து மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தீபக் சஹார் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள போதும், அவர் T20 உலகக்கிண்ணத்தில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<