மாகாண ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய தேசிய அணி வீரர்கள்

562

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது.

சுமார் 8 நாட்களாக நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் லசித் மாலிங்க தலைமையிலான காலி அணியும், தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. எனினும், சீரற்ற காலநிலையால் போட்டி தடைப்பட இறுதியில் இரண்டு அணிகளுக்கும் இணை சம்பியன் பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ThePapare.com இன் உலகக் கிண்ண உத்தேச இலங்கை அணி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி இன் 12 ஆவது உலகக் கிண்ண

எனினும், உலகக் கிண்ணத்தில் விளையாடலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் இப்போட்டித் தொடரில் பிரகாசிக்கவில்லை. அதேபோன்று அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் பிரகாசித்திருந்த வீரர்களுக்கும் இப்போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக இந்தத் தொடரில் 3 சதங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ண இலங்கை குழாம் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அக்குழாமில் இடம்பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான இறுதி வாய்ப்பாக அமைந்த இம்முறை மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

  • அஞ்செலோ மெதிவ்ஸ் (தம்புள்ளை அணி)

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அஞ்செலோ மெதிவ்ஸ் காயத்துக்கு உள்ளானார். இதனையடுத்து குறித்த தொடரிலிருந்து அவர் வெளியேறியதுடன், அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என்பவற்றில் பங்கேற்க முடியாமல் போனது.

இந்த நிலையில், கடந்த இரண்;டு மாதங்கள் ஓய்வெடுத்த வந்த அவர், அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் முதல் தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். குறித்த போட்டியில் மெதிவ்ஸுக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. பதுரெலிய கழகத்துக்கு எதிராக 4 ஓட்டங்களையும், கோல்ட்ஸ் கழகத்துக்கு எதிராக 28 ஓட்டங்களையும், சரசென்ஸ் கழகத்துக்காக எதிராக 9 ஓட்டங்களையும் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

எனவே, உபாதைக்குப் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய மெதிவ்ஸுக்கு உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெறுவதற்கான இறுதி வாய்ப்பாக கடந்த வாரம் நிறைவுக்கு வந்த மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

இதில் தம்புள்ளை அணியின் தலைவராகச் செயற்பட்ட மெதிவ்ஸ், கண்டி அணியுடன் நடைபெற்ற 3ஆவது இடத்துக்கான போட்டியில் சதமடித்து அசத்தியிருந்ததுடன், அந்த அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

சுபர் ப்ரொவின்சியல் தொடரில் இணை சம்பியன்களாக கொழும்பு, காலி அணிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாத்தினை தெரிவு செய்யும்

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த மெதிவ்ஸ், 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைச்சதம் மற்றும் ஒரு சதம் உள்ளடங்கலாக 227 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தத் தொடரில் மெதிவ்ஸ் பந்துவீசாவிட்டாலும், ஒரு துடுப்பாட்ட வீரராக தனது பொறுப்பை சிறப்பாக செய்து முடித்தார். எனவே இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ள உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் மத்திய வரிசையைப் பலப்படுத்துவதற்கான முக்கிய வீரர்களில் ஒருவராக மெதிவ்ஸ் இடம்பெறவுள்ளார்.

  • லஹிரு திரிமான்ன (காலி அணி)

இலங்கை அணியின் உள்ள அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான லஹிரு திரிமான்ன, இம்முறை மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் லசித மாலிங்க தலைமையிலான காலி அணிக்காக விளையாடியிருந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இத்தொடர் முழுவதும் களமிறங்கிய திரிமான்ன, 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைச்சதம் மற்றும் ஒரு சதம் உள்ளடங்கலாக 213 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இரண்டாவது வீரரக இடம்பிடித்தார்.

கொழும்பு அணியுடனான இறுதிப் போட்டியில் சதமடித்து அசத்திய திரிமான்னவுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்காத திரிமான்ன, இம்முறை மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநான் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி சிறப்பான முறையில் விளையாடியிருந்தார்.

எனினும், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் போட்டியின் பிறகு இலங்கை அணியில் இடம்பெறாத திரிமான்னவுக்கு இம்முறை உலகக் கிண்ண அணியில் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

  • பானுக்க ராஜபக்ஷ (தம்புள்ளை அணி)

இம்முறை மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் 4ஆம் இலக்கத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தை தம்புள்ளை அணிக்காக விளையாடிய இடதுகை துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பு யாருக்கு?

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 50 இற்கு குறைவான நாட்களே இன்னும் எஞ்சியிருக்கின்றன. இப்படியான ஒரு நிலையில், உலகக்

தம்புள்ளை அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு அரைச்சதத்துடன் 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக விளையாடியுள்ள 27 வயதான பானுக்க ராஜபக்ஷ, இதுவரை தேசிய அணிக்காக விளையாடவில்லை. எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.  

  • திமுத் கருணாரத்ன (கண்டி அணி)

‘டெஸ்ட் வீரர்’ என்று முத்திரை குத்தப்பட்ட திமுத் கருணாரத்ன 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். எனினும், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து விளையாடி வந்த திமுத், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்டு இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.

இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் திமுத் கருணாரத்னவுக்கு தலைவர் பதவியை கொடுக்கலாமா? என்பது குறித்து தேர்வாளர்கள் தீவிரமாக சிந்தித்து வந்தனர்.

இந்த நிலையில், இம்முறை மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் கண்டி அணியின் தலைவராக செயற்பட்ட திமுத் கருணாரத்ன, 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைச்சதத்துடன் 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட துடுப்பாட்ட வீரர்களில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட திமுத் கருணாரத்னவுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான திமுத், இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 190 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துள்ளார்.

  • லசித் மாலிங்க (காலி அணி)

இலங்கையில் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.பி.எல் தொடரிலிருந்து இடைநடுவில் நாடு திரும்பிய லசித் மாலிங்க, முதல் போட்டியிலேயே 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முதல்தரப் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டினார்.

குறித்த காலப்பகுதியில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறி சென்று வந்த மாலிங்க, இம்முறை மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்ட மாலிங்க, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக உள்ள மாலிங்க, மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தாலும், இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சை பலப்படுத்தவுள்ள முக்கிய துருப்புச்சீட்டாக அவர் இடம்பெறவுள்ளார். எனினும், உலக்க கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக மாலிங்க தொடர்ந்து செயற்படுவாரா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரியவரும்.

வீர விளையாட்டின் பின் மீண்டும் மும்பை அணியில் இணையும் மாலிங்க

இலங்கையில் நடைபெற்ற சுபர் ப்ரொவின்சியல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.பி.எல் தொடரிலிருந்து

  • திசர பெரேரா (கண்டி அணி)

இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அனுபவமிக்க வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான திசர பெரேரா, இம்முறை நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அவர், 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை மேலும் உறுதி செய்துகொண்டார்.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய திசர, உலகக் கிண்ணத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை திறன்படச் செய்வார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

  • கசுன் ராஜித்த (கண்டி அணி)

இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற மற்றுமொரு இளம் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக கசுன் ராஜித்த விளங்குகின்றார்.

இம்முறை நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் கண்டி அணிக்காக விளையாடிய அவர், 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்ளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரராக இடம்பிடித்தார்.

எனினும், கசுன் ராஜித்தவுக்கு இம்முறை உலகக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்படவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் வாய்ப்பு கிடைப்பது கேள்விக் குறியாக இருந்தாலும், குறைந்தபட்சம் அவரை மேலதிக வீரர்களுக்கான பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்வாளர்ககள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

  • ஜீவன் மெண்டிஸ் (தம்புள்ளை அணி)

இலங்கை அணியின் அனுபவமிக்க சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ், மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்தார்.

அந்த அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய அவர், 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதில் கொழும்பு அணியுடனான லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஜீவன், மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டத்தில் 33 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தார்.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கைக்காக எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடாத ஜீவன் மெண்டிஸ், அவ்வப்போது இலங்கை டி-20 அணிக்காக விளையாடியிருந்தார். அத்துடன், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற டி-20 தொடர்களிலும் தொடர்ந்து விளையாடி வந்தார்.

Videos – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 72

24 மணித்தியாலத்துக்குள் இந்தியாவிலும், இலங்கையிலும் விக்கெட்டுக்களை அள்ளிய லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடிமேல்

எனவே ஒரு அனுபவமிக்க வீரராக ஜீவன் மெண்டிஸுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.  

  • அகில தனஞ்சய (கொழும்பு அணி)

இம்முறை நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க தவறினாலும், பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும் நம்பிக்கையுடன் விளையாடி வருகின்ற அகில தனஞ்சய, கொழும்பு அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி, அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அகில தனஞ்சயவுக்கும், இம்முறை உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சச்சித்ர, வனிந்துவுக்கு ஏமாற்றம்

அண்மைக்காலமாக உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற சச்சித்ர சேனநாயக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய வீரர்களுக்கு இம்முறை நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது.

கண்டி அணிக்காக விளையாடியிருந்த சச்சித்ர சேனநாயக்கவுக்கு 4 போட்டிகளில் 2 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 59 ஓட்டங்களையும் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் 3ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

இதேநேரம், உள்ளுர் கழகமட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக தனது சிறப்பான துடுப்பாட்டத்தையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தி தேசிய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற மற்றுமொரு இளம் வீரரான வனிந்து ஹசரங்க, இம்முறை மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரில் ஓரளவு திறமையினை வெளிப்படுத்தி ஆறுதல் கொடுத்தார்.

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2018/2019 பருவகாலத்துக்கான இலங்கையின் பிரதான உள்ளூர்

காலி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய அவர், 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 149 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களில் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, முன்னதாக நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் 18 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட வனிந்துவுக்கு, மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் வெறும் ஒரு விக்கெட்டினை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது.

2017ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இறுதியாக விளையாடியிருந்த வனிந்து ஹசரங்கவுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க