இலங்கை வீரர்களின் PCR முடிவுகள் வெளியாகின

India Tour Of Sri Lanka - 2021

470

இந்திய தொடரில் விளையாடவிருந்த அனைத்து இலங்கை வீரர்களுக்கும் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் நாளை முதல் தமது பயிற்சிகளை ஆரம்பிக்கலாம் என இலங்கை கிரிக்கெட் சபை வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இலங்கை அணி, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிவிட்டு கடந்த 6ஆம் திகதி நாடு திரும்பியது. 

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

இலங்கை அணி நாடு திரும்பிய சில நாட்களில் இங்கிலாந்து அணியில் உள்ள 3 வீரர்கள் உட்பட்ட எழுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது 

இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கு நடத்தப்பட்ட  PCR பரிசோதனையில் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், தரவு ஆய்வாளர் ஷிரன்த நிரோஷன ஆகியோருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால் வீரர்களுக்கு சாதாரண தனிமைப்படுத்தும் காலத்தைக் மேலதிகமாக 3 நாட்கள் நீட்டிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது. அதேபோல, இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடரை 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், கொழும்பில் பயிற்சிகளைப் பெற்று வந்த சந்துன் வீரக்கொடி, பானுக்க ராஜபக், அசேல குணரத்ன, அஞ்சலோ பெரேரா, ஷான் பிரியன்ஞன் ஆகிய வீரர்களை பயிற்சிப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்றுமுன்தினம் மாலை தம்புள்ளைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே தம்புள்ளைக்கு அனுப்பப்பட்ட இலங்கை வீரர்களில் சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவருடன் நேரடித் தொடர்பில் இருந்து பயிற்சிகளில் பங்குபற்றிய பானுக்க ராஜபக் உள்ளிட்ட வீரர்களை தனிமைப்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

அதேபோல, அவர்களுடன் தொடர்பில் இருந்த 14 வீரர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இலங்கை அணியின் 14 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

மறுபுறத்தில், இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பி கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வீரர்களை கொழும்பு சினமன்ட் கிரேன்ட் ஹோட்டலில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களின் தனிமைக்காலம் நேற்று முடிவடைந்தது.

இதனையடுத்து அனைத்து வீரர்களுக்கும் இன்று காலை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள் இன்றி பயிற்சிகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. 

இலங்கை – இந்திய தொடர்களில் மீண்டும் திகதி மாற்றம்

இதன்படி, இன்று மாலை ஜிம் பயிற்சிகளையும், நாளை முதல் மைதானங்களுக்குச் சென்று பயிற்சிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இலங்கை வீரர்கள் நாளை முதல் உயிரியல் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், அனைத்து வீரர்களும் உயிரியல் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றபின், ஒவ்வொரு 3ஆவது மற்றும் 5ஆவது நாளில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்  எனத் தெரிவிக்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<