முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

5

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில்,  பங்களாதேஷ் 3 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>சமநிலை அடைந்த இலங்கை – நியூசிலாந்து A அணிகளின் முதல் முதல்தரப் போட்டி

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் ஆடுகின்றது. இந்த நிலையில் இரு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (20) ராஜாஷியில் தொடங்கியிருந்தது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்கள் பெற்றனர்.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசியிருந்த வீராங்கனைகளில் ஹன்சிமா கருணாரட்ன 54 ஓட்டங்களையும், மறுமுனையில் இமேஷா துலானி 52 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

பங்களாதேஷ் மகளிர் பந்துவீச்சில் ரிது மோனி 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், நஹிதா அக்தார் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 206 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் போட்டியின் வெற்றி இலக்கினை 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களுடன் அடைந்தது.

பங்களாதேஷ் மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் ஷர்மின் அக்தார் 13 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஷோபனா மோஸ்தாரி 41 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் தேவ்மி விஹாங்கா 3 விக்கெட்டுக்களையும், மால்கி மாதரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு பங்களாதேஷ் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்து கொள்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<