இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தமது அணியில் மாற்று வீரராக இணைந்துகொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ‘இஸ்லாமாபாத் யுனைடெட்’ அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து ‘A’ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டித் தொடர் நிறைவடைந்ததும் அவர் பாகிஸ்தான் நோக்கிப் பயணிக்கவுள்ளார்.
நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரிக்கு பதிலாக, பாகிஸ்தான் நாணயப்படி 18 இலட்சம் ரூபாவுக்கு இலங்கை மதிப்பில் சுமார் 20 இலட்சம் ரூபா) அவர் இந்தத் தொடரில் இணையவுள்ளார்.
நியூசிலாந்து ‘A’ அணியுடனான நான்கு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் காரணமாக, பவன் ரத்நாயக்க இந்த அழைப்பை ஏற்கனவே நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், நியூசிலாந்து தொடர் முடிந்த பின்னர் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பங்கேற்குமாறு அவருக்கு தற்போது மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
>>டில்சான் மதுசங்கவிற்கு IPL தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு
இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது மற்றும் இறுதி நான்கு நாள் போட்டி 26ஆம் திகதி நிறைவடைந்த பின்னர், பவன் ரத்நாயக்க இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பவன் ரத்நாயக்கவிற்கு பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தடையில்லாச் சான்றிதழ் வழங்ப்பட்டதா என்பது தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதேவேளை, இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குசல் மெண்டிஸ், துனித் வெல்லாலகே, சரித் அசலங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் தினேஷ் சந்திமால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















