சர்பராஸ் அஹ்மட்டுக்கு பாகிஸ்தான் அணியில் முக்கிய பதவி

Sri Lanka Women’s Tour of India 2025

1
Sarfaraz Ahmed

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவருமான சர்பராஸ் அஹ்மட், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் சிரேஷ்ட ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியை ஆலோசகராகவும், முகாமையாளராகவும் வழிநடத்தி சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தமை இவரது அண்மைக்கால சாதனையாகும்.

இதனிடையே, அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இவர் இந்த முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். இவருடன் முன்னாள் டெஸ்ட் வீரர்களான அசாத் ஷபீக் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும், உமர் குல் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், ஷான் மசூத் தொடர்ந்து அணியின் தலைவராகச் செயற்படுவார். இந்தப் சுற்றுப்பயணமானது பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அரங்கில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அணியில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையை உறுதி செய்யும் நோக்கில், இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத நான்கு புதிய வீரர்கள் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அப்துல்லாஹ் ஃபசால், அமாத் பட், அஸான் அவாய்ஸ் மற்றும் முஹம்மத் காசி கோரி ஆகியோர் முதன்முறையாக டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகப் பார்க்கப்படுகிறது.

தற்சமயம் லாஹூரில் நடைபெற்று வரும் சிவப்புப் பந்து பயிற்சிக்கான முகாமில் அஸான் அவாய்ஸ், இமாம்-உல்-ஹக், முஹம்மத் காசி கோரி, நோமான் அலி மற்றும் சாஜித் கான் ஆகிய ஐந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி மே மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை டாக்காவில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சில்ஹெட்டில் இடம்பெறும். இதற்கான பிரதானப் பயிற்சி முகாம் கராச்சியில் ஏப்ரல் 27 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 1 ஆம் திகதி வரை தொடரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் அணியானது மே மாதம் 2 ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கிப் புறப்படத் திட்டமிட்டுள்ளது. தற்சமயம் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் விளையாடி வரும் வீரர்கள், அந்தத் தொடரில் தமது அணிகளின் பங்களிப்பு நிறைவடைந்ததும் கராச்சி பயிற்சி முகாமில் இணைந்து கொள்வார்கள். இறுதிப் போட்டியில் விளையாடும் வீரர்கள் மே 3 ஆம் திகதி தொடர் நிறைவடைந்த பின்னர் பங்களாதேஷ் பயணத்தில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்:

 

ஷான் மசூத் (தலைவர்), அப்துல்லாஹ் ஃபசால், அமாத் பட், அஸான் அவாய்ஸ், பாபர் அசாம், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், குர்ரம் ஷாசாத், மொஹம்மட் அப்பாஸ், மொஹமட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), முஹம்மத் காசி கோரி (விக்கெட் காப்பாளர்), நோமான் அலி, சாஜித் கான், சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<