இறுதிநாளில் இலங்கை அணி வெற்றிபெற 330 ஓட்டங்கள் தேவை

738
SL vs Eng day 4
@Getty Image

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 128.4 ஓவர்களில் 416 ஓட்டங்களைப் பெற்று  சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் அதிஷ்டத்துடன் ஆடிய பேர்ஸ்டோவ் 167 ஓட்டங்களையும், எலஸ்டயர் குக் 85 ஓட்டங்களையும், க்றிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் நான்கு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களான லக்மால் 3 விக்கெட்டுகளையும்,  நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி 95.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் கௌஷால் சில்வா 79 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களையும் , ரங்கன ஹேரத் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுக்கு அரைச்சதம், இலங்கை வலுவான நிலையில்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டீபன் பின் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட்  ப்ரோட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இதன்பின் 2ஆவது இனிங்ஸில் 128 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. முதல் விக்கட்டுக்காக 45 ஓட்டங்கள் பகிரப்பட்டன. பின் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 41 ஓட்டங்களோடும் ஸ்டீபன் பின் 6 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின் நேற்று தமது இனிங்ஸைத் தொடர்ந்தது இங்கிலாந்து அணி. ஆரம்பத்திலேயே ஸ்டீபன் பின் 7 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸோடு ஜோடி சேர்ந்த எலஸ்டயர் குக் சிறந்த இணைப்பாட்டதைப் பெற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இந்த இணைப்பாட்டத்தின் போது அலெக்ஸ் ஹேல்ஸ் நுவான் பிரதீப் வீசிய பந்தில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ஆனால் நடுவராக இருந்த ரொட் டக்கர் அதுநோ போல்பந்து எனக் கூறினார். ஆனால் நுவான் பிரதீப்பின் கால் பாதத்தின் சிறுபகுதி கோட்டிற்குப் பின்னால்இருந்தமையால் அதைநோ போல்பந்தாகக் கணிக்க முடியாது. ஆயினும்  அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டம் இழப்பில் இருந்து தப்பினார். பின் அவர் 94 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இறுதியில்  இங்கிலாந்து அணி 7 விக்கட் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸை தவிர எலஸ்டயர் குக் ஆட்டம் இழக்காமல் 49 ஓட்டங்களையும், ஜொனி பெயார்ஸ்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

2ஆவது இனிங்ஸில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான  ஷாமிந்த எரங்க மற்றும் நுவான் பிரதீப்வி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த எஞ்சலொ மெதிவ்ஸ் 1 விக்கட்டை வீழ்த்தினார்.

இலங்கையிடம் இருந்த போட்டியின் போக்கு இங்கிலாந்திடம்

பின்பு இலங்கை அணிக்கு 362 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா 12 ஓட்டங்களோடும் திமுத் கருணாரத்ன 19 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 45 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற இன்றைய இறுதி நாளில் 10 விக்கட்டுகளும் கையிருப்பில் இருக்க இன்னும் 330 ஓட்டங்களைப் பெறவேண்டும். இதனால் வெற்றிபெறுவது என்பது ஒரு சிரமமான காரியமாகும். அவ்வாறு வெற்றிபெற வேண்டுமாயின் ஓட்டங்களை வேகமாகப் பெறவேண்டிய.நிலை உள்ளது. ஆனால் ஓட்டங்களை வேகமாகப் பெறும் நோக்கில் விக்கட்டுகள் வீழ்ந்தால் போட்டி இங்கிலாந்து பக்கம் திரும்பும். அதனால் போட்டியை சமநிலைப்படுத்தும் நோக்கில் இலங்கை வீரர்கள் அவதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்