கஸகஸ்தானின் அல்மாட்டில் இம்மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திறந்த மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையிலிருந்து ஐந்து வீரர்களை பங்குபற்றச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான கடைசி தகுதிகாண் போட்டிகளில் ஒன்றாக கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இதில் ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
திடீர் உபாதையினால் ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிடும் டில்ஷி
இதன்படி, கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிமாலி லியனாஆரச்சி (800 மீட்டர்), டில்ஷி குமாரசிங்க (800 மீட்டர்), நதீஷா ராமநாயக்க (400 மீட்டர்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), உஷான் திவங்க (உயரம் பாய்தல்) மற்றும் காலிங்க குமாரகே (400 மீட்டர்) உள்ளிட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இதில் ஒலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கியுள்ள நிலானி ரத்னாயக்கவின் பெண்களுக்கான 3,000 மீட்டர் தடைதாண்டல் போட்டி இம்முறை கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில் உள்ளடக்கப்படவில்லை. இதனால் அவரது பெயர் இந்தத் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்படவில்லை.
அதேபோல, இந்தப் போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ள 800 மீட்டர் தேசிய சம்பியனான டில்ஷி குமாரசிங்க, உபாதை காரணமாக விலகிக் கொண்டார்.
இதனிடையே, கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியின் முகாமையாளராக சுசன்த பெர்னாண்டோ முன்மொழியப்பட்டாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதன்காரணமாக 400 மீற்றர் முன்னாள் சம்பியன் காலிங்க குமாரகேவின் பயிற்றுவிப்பாளர் விமுக்தி சொய்ஸாவை இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, இலங்கையில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கை வீரர்களை இந்தப் போட்டித் தொடரில் பங்குபற்றச் செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் களமிறங்கியுள்ளது.
அத்துடன், தற்போது அமெரிக்காவில் உள்ள உயரம் பாய்தல் வீரர் உஷான் திவங்கவின் வீசா தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயரம் பாய்தலில் தெற்காசிய சாதனையை முறியடித்தார் உஷான் திவங்க
எதுஎவ்வாறாயினும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கான இறுதி வாய்ப்பாக கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகள் இலங்கை வீரர்களுக்கு அமைந்துள்ளது.
இதேவேளை, கஸகஸ்தான் திறந்த மெய்வல்லுனர் போட்டிகளுக்கான விமான டிக்கெட் உள்ளிட்ட அனைதது செலவுகளும் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…