ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கை

168

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 09 பதக்கங்கங்களை வென்ற இலங்கை அணி, பதக்கப்பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பெற்று ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் புதிய வரலாறு படைத்தது.

இதில் இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியிலும், புதிய ஆசிய மற்றும் இலங்கை சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு மேலும் இரு பதக்கங்கள்

ஜப்பானின் கிபு நகரின் நகரகவா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய கனிஷ்ட…

அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான டில்ஷி ஷியாமலி குமாரசிங்க, பெண்களுக்கான 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும், தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று கொடுத்தனர்.

அத்துடன், இவ்விரண்டு வீராங்கனைகளும் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்திலும் இலங்கை அணிக்காக வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பசிந்து கொடிக்கார வெள்ளிப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார்.

ஜப்பானின் கிபு நகரின் நகரகவா விளையாட்டரங்கில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுவந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று (10) நிறைவடைந்தது.

இம்முறை போட்டித் தொடரின் இறுதி போட்டி நிகழ்ச்சியாக நடைபெற்ற 4 x 400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அஞ்சலோட்ட குழாம் தங்கப் பதக்கத்தையும் பெண்கள் அஞ்சலோட்ட குழாம் வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டது.

இதில் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை வீரர்களின் ஆதிக்கமே ஆரம்பம் முதல் மேலோங்கி இருந்தது.

எனினும், இப்போட்டியில் 2 ஆவது மற்றும் 3 ஆவது கோல் பரிமாற்றங்களில் மலேஷிய மற்றும் தாய்லாந்து வீரர்கள் இலங்கைக்கு சவால் கொடுத்திருந்தனர். ஆனால் அந்த சவாலை இறுதி வீரராக ஓடி லாவகமாக முறியடித்த நட்சத்திர வீரர் அருண தர்ஷன உள்ளிட்ட இலங்கை குழாம் போட்டியை 03 நிமிடங்களும் 08.70 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

பபசர நிகு, பசிந்து கொடிக்கார, ரவிஷ்க இந்திரஜித், அருண தர்ஷன ஆகியோர் இலங்கை குழாமை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் இலங்கை அணியின் முகாமையாளர் பதவிநீக்கம்

ஜப்பானின் கிபு நகரில் இம்மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18ஆவது ஆசிய கனிஷ்ட…

முன்னதாக கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் இதே இலங்கை அணிதான் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப்போட்டியில் தாய்லாந்து அணி (3 நிமிடங்களும் 09.20 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், மலேஷிய அணி (3 நிமிடங்களும் 09.60 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

எனினும், முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் ஏற்கனவே 100 மற்றும் 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற அமாஷா டி சில்வா, 400 மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற டில்ஷி குமாரசிங்க, ரொமேஷி அத்திடிய, சச்சினி திவ்யாஞ்சலி உள்ளிட்ட இலங்கை குழாம் (3 நிமிடங்களும் 45.16 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இப்போட்டியில் ஜப்பான் அணி (3 நிமிடங்களும் 38.20 செக்.) முந்திய சாதனையை விட சிறப்பாக ஓடி முடித்து தங்கப் பதக்கத்தையும், இந்திய அணி (3 நிமிடங்களும் 41.11 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

அமாஷாவுக்கு இரட்டை வெள்ளிப் பதக்கம்

போட்டிகளின் இறுதி நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணியின் இளம் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அதற்காக அவர் 24.47 செக்கன்களை எடுத்துக் கொண்டார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

முன்னதாக நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை 24.76 செக்கன்களில் ஓடி முடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தார். எனினும், ஒட்டுமொத்த நேரப் பெறுமதிகளின் அடிப்படையில் அமாஷாவுக்கு இறுதிப் போட்டியில் மிகவும் கடினமான 9 ஆவது சுவட்டில் ஓடுவதற்கனான வாய்ப்பு கிடைத்தது.

அமாஷா டி சில்வா

இதன்படி, சீரற்ற காலநிலைக்கு மத்தியில் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை வீராங்கனை அமாஷா டி சில்வா ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், போட்டியின் இறுதி 50 மீற்றர் தூரத்தை வேகமாக ஓடுவதில் கடும் முயற்சி எடுத்ததை காணமுடிந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக முதலாவது இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இறுதி ஒருசில செக்கன்களில் அவர் தவறவிட்டார்.

இதன்படி, சீனாவின் யனன் தவோ (24.01செக்.) முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கையின் அமாஷா டி சில்வா, 0.46 மில்லி செக்கன்களினால் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை ஜிஸ்னா மெதிவ் (24.48 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

கண்டியில் முதல் தடவையாக நடைபெறவுள்ள ஒலிம்பியன்ஸ் ஓட்டம்

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு…

இதன்படி, இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் தனிநபர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற இரண்டாவது இலங்கை வீராங்கனையாகவும் இடம்பிடித்தார்.

எனினும், தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா, நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் (24.70 செக்.) அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசிந்துவுக்கு ஏமாற்றம்

பசிந்து கொடிகார

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணியின் மற்றுமொரு மத்திய தூர ஓட்ட வீரரான பசிந்து கொடிகார இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதற்காக அவர் 53.47 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று ஓட்டப் போட்டியில் (53.35 செக்.) 4 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

முன்னதாக கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் இதே போட்டிப் பிரிவில் பங்கேற்றிருந்த பசிந்து, போட்டித் தூரத்தை 52.56 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தெற்காசிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தரிந்துவுக்கு 5ஆவது இடம்

தரிந்து தசுன்

உயரம் பாய்தல் போட்டியில் தெற்காசியாவின் கனிஷ்ட சம்பியனான தரிந்து தசுன், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 2.03 மீற்றர் உயரத்திற்கு திறமையை வெளிப்படுத்தினார்.

தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளத்தில் நடத்துவதற்கு தீர்மானம்

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய…

எனினும், அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 2.04 மீற்றர் உயரத்திற்கு திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதக்கப்பட்டியில் இலங்கைக்கு 5 ஆவது இடம்

18 ஆவது தடவையாக நடைபெற்ற இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 35 நாடுகளைச் சேர்ந்த 450 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 5 வீரர்களும், 7 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்று இலங்கை அணி வரலாறு படைத்தது.

இதன்படி, 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 9 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

முன்னதாக 2012 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது ஆசிய கனிஷ்ட  மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி, 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 6 பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இறுதியாக வியட்நாமில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் இலங்கை அணி எந்தவொரு பதக்கத்தையும் வெற்றி கொள்ளவில்லை.

இதேவேளை, 14 தங்கம், 15 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்ற போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் ஒட்ட மொத்தமாக 42 பதக்கங்களை வென்று சம்பியனாகத் தெரிவாகியது.

அத்துடன், 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்ற சீனா இரண்டாவது இடத்தையும், 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதி முதல்

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள்…

இதேநேரம், 4 தங்கப் பதக்கங்களை வென்ற சீனா தாய்ப்பே 4 ஆவது இடத்தையும், 3 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்ற பிரபல கட்டார் அணி 6 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கு தகுதி

இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சிறப்பாக செயற்பட்டு பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான அடைவு மட்டங்களை பூர்த்தி செய்திருந்தனர்.

எனவே, அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பின்லாந்தில் நடைபெறவுள்ள 17 ஆவது உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனிநபர் நிகழ்ச்சிகளில் 4 வீரர்களுடன், 4 x 400 ஆண்கள் அஞ்சலோட்ட அணியும் தகுதியைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, ஆண்களுக்கான 400 மீற்றரில் அருண தர்ஷன, பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டலில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, பெண்களுக்கான 400 மீற்றரில் டில்ஷி குமாரசிங்க மற்றும் பெண்களுக்கான 200 மீற்றரில் அமாஷா டி சில்வா ஆகியோர் இவ்வாறு உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்குத் தகுதி பெற்றுக் கொண்டனர். அத்துடன், அருண தர்ஷன தலைமையிலான இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட அணியும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கு தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க