தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளத்தில் நடத்துவதற்கு தீர்மானம்

117

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை திட்டமிட்டபடி அடுத்த வருடம் (2019) நேபாளத்தில் நடத்துவதற்கு நேபாள ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்றதுடன், அடுத்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

எனினும், குறித்த போட்டித் தொடர் அடுத்த வருடம் நடைபெறவிருந்தாலும், நேபாள அரசு அதற்கான நிதியினை ஒதுக்குவதற்கு முன்வராமை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளை நடத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் கடந்த வருடம் நடவடிக்கை எடுத்திருந்தது.

வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம்

வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத்..

இதனையடுத்து, தெற்காசிய விளையாட்டு விழாவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய ஒலிம்பிக் சம்மேளனமும் அவதானம் செலுத்தியிருந்ததுடன், அதற்கான விசேட கூ.ட்டமொன்று கடந்த ஆகஸ்ட் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதன்படி, விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேபாள அரசாங்கத்தின் தலையீட்டினால் ஏற்கனவே திட்டமிட்டபடி தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம், தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த போட்டிகளை நடத்துவதற்கு தயாராகிக் கொண்ட இலங்கையின் எதிர்பார்ப்பு 14 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வரை பிற்போடப்பட்டது.

இவ்விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண போட்டிகள் 1984 ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு குறித்த விளையாட்டு விழா நேபாளத்தில் நடைபெற்றிருந்ததுடன், தற்போது மூன்றாவது முறையாகவும் தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளம் நடத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இவ்விளையாட்டு விழா நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு 2 மில்லியன் ரூபா நிதியினை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 13 ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு…

இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு அதிக பதக்கங்களை பெற்றுக்கொடுப்பதற்கான சகல உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என சீன ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் கோயூ ஷேன்கேவேன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் சீன ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் குவா ஷேன்கேவேன ஆகியோருக்கிடையில் அண்மையில் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு பீஜிங் உள்ளிட்ட சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று இலவசமாகப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் வழங்கவுள்ளோம். இதன் மூலம் சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும். அத்துடன், எதிர்வரும் காலங்களில் பயிற்சியாளர்களுக்கான விசேட கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில், அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடைந்து வருகின்ற நாடாக சீனா விளங்குகின்றது. இறுதியாக நடைபெற்ற 2008, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் சீனா பதக்கப்பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றது. எனவே, நட்சத்திர வீரர்களை உருவாக்கியுள்ள சீனாவிடமிருந்து எமது வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை பொன்னான தருணம் என கருதுகிறேன். எனவே, இலங்கையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து உதவுவதற்கு முன்வர வேண்டும் என இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் இதன்போது தெரிவித்துள்ளார்.

‘அல் ஜெஸீரா’ விவகாரத்தில் சின்ன மீன்களே பிடிபட்டிருப்பதாக கூறுகிறார் ரணதுங்க

இலங்கையில் ஊழல் உயர்மட்டத்திற்கு..

இதனையடுத்து, தெற்காசிய விளையாட்டு விழா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக தேசிய ஒலிம்பிக் சங்கம் மூவரடங்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளது. இக்குழுவில் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் உப தலைவர் ஜோசப் கெனீ, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான சந்தன லியனகே மற்றும் அஜித் நாமல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

34 வருட கால வரலாற்றைக் கொண்ட தெற்காசிய விளையாட்டு விழாவில் 1088 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா தொடர்ந்து முதலிடத்தைக் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் முறையே 323, 210 தங்கப் பதக்கங்களை வென்று 2 ஆவது, 3 ஆவது இடங்களில் உள்ளன. இதேநேரம் நேபாளம் (79), பங்களாதேஷ் (67), ஆப்கானிஸ்தான் (20), பூட்டான் (02) என அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், மாலைதீவுகள் இதுவரை காலமும் எந்தவொரு தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கவில்லை.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<