சகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகம்

367

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சகிப் அல் ஹசன் கைவிரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளில் முதன்முறையாக T-20 தொடரை வென்ற பங்களாதேஷ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அமெரிக்காவின் லவுடர்ஹில்லில் நடைபெற்ற மூன்றாவதும்….

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளின் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான சகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முற்பட்ட வேளையில் மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளானார்.

வலது கைவிரலில் ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், தொடர்ந்து 3 வாரங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் டி-20 தொடரிலிருந்து விலகிக் கொண்ட சகிப், அதன்பின் அவுஸ்திரேலியா சென்று சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் சகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், காயத்துக்கு மாத்திரம் சிகிச்சை மேற்கொண்ட அவர், கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு டி-20 தொடரின் கடைசியாக நடைபெற்ற இரண்டு லீக் ஆட்டங்களுடன் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த சில வாரங்களாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த தொடரில் டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களைக் கைப்பற்றி அசத்தியது.

எதிரணி வீரர் கன்னி சதம் பெறுவதை தடுத்த பந்துவீச்சாளருக்கு 9 போட்டிகள் தடை

இங்கிலாந்து உள்ளூர் லீக் கிரிக்கெட் போட்டியில் எதிரணி துடுப்பாட்ட வீரர் தனது கன்னி சதத்தை பெறுவதை…

இந்த நிலையில், கடைசியாக நடைபெற்ற டி-20 போட்டியில் சகிப்புக்கு மீண்டும் கைவிரலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வலியை கட்டுப்படுத்த தடுப்பு ஊசிகளை போட்டுக் கொண்டு அவர் விளையாடியுள்ளார். இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய போது ஊடகவியலாளரிடம் சகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ‘எனது கைவிரலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், எனவே அதுதொடர்பில் கிரிக்கெட் சபையுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளேன். இந்த அறுவை சிகிச்சை அநேகமாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு முன்னதாக இடம்பெறலாம் எனவும் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களை பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. இதற்கு சிரேஷ்ட வீரர்கள் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். எனவே அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தொடரிலும் இதே உத்வேகத்துடன் விளையாடி சம்பியன் பட்டத்தை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சகிப் அல் ஹசன், இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன், ஆசிய கிண்ண போட்டிகளின் பிறகு சகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

அசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளரந்து வரும் அணிக்கும், இலங்கை…

சகிப்பின் அறுவை சிகிச்சை தொடர்பில் நஸ்முல் ஹசன் மேலும் கருத்து வெளியிடுகையில், மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப் பயணத்தின் போது சகிப் என்னை தொடர்பு கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். அதேபோல அவருடைய கைவிரலில் ஏற்பட்டுள்ள உபாதையினால் முன்பைப் போல சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியாமல் உள்ளதாக தெரிவித்த பயிற்றுவிப்பாளரான ஸ்டீவ் ரோட்ஸ், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி, சகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எதிர்வரும் 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டி நேரிடும். இதனால் ஆசிய கிண்ணத்தை அவர் தவறவிடுவார்.

இவ்வாறு நீண்ட காலத்திற்கு அவர் ஓய்வில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்த அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன், ஆசிய கிண்ணப் போட்டிகளிற்குப் பிறகு, அதாவது ஜிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடரின் போது அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தனது கைவிரலில் ஏற்பட்ட உபாதைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் சகிப் அல் ஹசன் இருந்தாலும், ஆசிய கிண்ணப் போட்டிகளில் அவரது பங்குற்றலின் அவசியத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனாலும், சகிப்பின் அறுவை சிகிச்சை குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் ஓரிரண்டு தினங்களில் அறிவிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க