திறமையான வீரர்களை உருவாக்க சங்கக்காரவின் ஆலோசனை

314
sangakkara
Image Courtesy : PMD

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு புள்ளிகளை வழங்குகின்ற முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினருமான குமார் சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உள்ளூர் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

>> தரம் 8 முதல் விளையாட்டுப் பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதி

இதில் தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினராக கலந்துகொண்டு குமார் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில்

“இலங்கையில் உள்ள விளையாட்டுக்களை தரப்படுத்தி சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்கின்ற வீரர்களை உருவாக்க வேண்டும். அத்துடன் குறித்த வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை அளிப்பதற்கான வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்

இதனிடையே, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது விளையாட்டு திறமைகளுக்காக புள்ளிகளை வழங்கும் முறையை ஊக்குவித்தல் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் தேசிய ரீதியான வீரர்களை உருவாக்குவதில் உள்ள இயலுமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்” என சுட்டிக்காட்டினார்.  

இதன்போது, ஆரோக்கியமும், ஒழுக்கநெறியும் கொண்ட சமூகத்திற்கு பொருத்தமான விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

>> Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்

”ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட மற்றும் சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியும். கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சுக்களுக்கு அதற்காக பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அத்துடன், நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளை சிறுவயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான உரிய போசாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

>> Video – இலங்கையின் விளையாட்டுக்கு கைகொடுக்கத் தயார்! Kumar Sangakkara

இதேவேளை, கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில்

”பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மைதானங்களைப் பெற்றுத் தருமாறு கேட்டாலும் அவற்றை அமைத்துக் கொடுத்ததற்குப் பின்னர் ஒழுங்காக பராமரிக்காத நிலையை பல்வேறு இடங்களில் காணமுடிகின்றது. புல் வெட்டுதல் போன்ற மிக இலகுவாக செய்யக்கூடிய பராமரிப்பு விடயங்களுக்கு பாரிய நிதி தேவையில்லை” என குறிப்பிட்டார்.  

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதுஇவ்வாறிருக்க, கொழும்பு – 07, டொரின்டன் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தை தியகம விளையாட்டு தொகுதி வளாகத்துடன் இணைத்து சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

>> இலங்கையில் 25 விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல்

அத்துடன், விளையாட்டு கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சிறு பிள்ளகைள் விளையாடுகின்ற இடங்களை தேடிச் சென்று விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

அதுமாத்திமின்றி, பிரதான விளையாட்டு மைதானங்களை ஒரு நிறுவனத்தின் கீழ் நிர்வகித்தல், முழுமையான வசதிகளைக்கொண்ட விளையாட்டுப் பாடசாலைகள் 25 உருவாக்குதல், விளையாட்டு சட்டத்திற்கு புதிய முன்மொழிவுகளை உள்ளடக்குதல் மற்றும் புதிய சட்டமொன்றை தயாரித்தல், விளையாட்டின் மேம்பாட்டிற்காக தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கடந்த மாதத்தில் தமது அமைச்சு அவதானம் செலுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார் 

இதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போது சுகததாச விளையாட்டு அதிகார சபையை முழுமையாக மீளக்கட்டமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது

>> Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa

அத்துடன், ஒலிம்பிக் பதக்கத்தை வெற்றிகொள்ளக்கூடிய விளையாட்டாக இனங்காணப்பட்டுள்ள ஈட்டி எறிதல் மற்றும் இலக்கு பார்த்து சுடுதல் போன்ற விளையாட்டுக்களை பாடசாலை மட்டத்திலிருந்து மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

பல்வேறு விளையாட்டுக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டுகின்ற உலகில் ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தேசிய இலச்சினையின் கீழ் ஒன்றிணையுமாறு அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.  

இந்த விசேட கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்கள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<