BCCI புதிய ஒப்பந்தத்தில் பும்ராஹ், ரிஷப் பான்ட் ஆகியோருக்கு அதிக சம்பளம்

303
Image Courtesy - Getty Image

இந்திய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், ஜஸ்பிரிட் பும்ராஹ் மற்றும் ரிஷப் பாண்ட ஆகிய இளம் வீரர்களுக்கு முறையே A+ மற்றும் A பிரிவு ஒப்பந்தங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், இம்முறை ஒப்பந்தத்தில் அம்பாத்தி ராயுடு, ஹனுமா விஹாரி மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் புதிதாக இடம்பெற்றுள்ளதுடன், கடந்த முறை ஓப்பந்தத்தில் இடம்பெற்ற பார்த்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் பட்டேல், கருண் நாயர் ஆகியோர் இந்தமுறை இடம்பெறவில்லை.

சதத்தின் மூலம் பல சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோஹ்லி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (05) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த விராட்…

2018 – 2019 வருடத்துக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை இந்திய கிரிக்கெட் சபை நேற்று (07) வெளியிட்டது. இதில் A+ பிரிவில் (7 கோடி சம்பளம்) விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ராஹ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், கடந்த வருடம் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், இதற்கு அடுத்த A பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்தப் பட்டியலில் சுரேஷ் ரெய்னா (கடந்த வருடம் C பிரிவு), முரளி விஜய் (கடந்த வருடம் A பிரிவு) ஆகிய இரண்டு வீரர்களின் பெயர்கள் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை. மேலும், கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்ற பார்த்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் படேல், கருண் நாயர் ஆகியோருக்கும் இந்த வருடம் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

பார்த்தீவ் படேல் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். கருண் நாயர் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதேநேரம், அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் பிரகாசித்த இளம் வீரரான ரிஷப் பான்ட். முதல் தடவையாக A பிரிவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளார். 5 கோடி சம்பளம் பெறும் இந்தப் பிரிவில் மகேந்திர சிங் டோனி, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஜிங்கியே ரஹானே, மொஹமட் சமி, இஷான் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த புஜாரா மற்றும் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளை காயம் காரணமாக தவறவிட்ட அஷ்வின், தொடர்ந்து A பிரிவு ஒப்பந்தத்தில் நீடிக்கின்றனர்.

மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த ப்ரித்வி ஷாவ், அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 3 அரைச் சதங்கள் எடுத்து சிறப்பாக ஆடிய மயங் அகர்வால் ஆகியோர் எந்த ஒப்பந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை.

B பிரிவில் (ரூ. 3 கோடி சம்பளம்) கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகியோரும், C பிரிவில் (ரூ 1 கோடி சம்பளம்) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பாதி ராயுடு, ஹனுமா விஹாரி, கலீல் அஹமட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

டி-20 அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய சுரேஷ் ரெய்னா

இருபதுக்கு – 20 போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை…

இதேநேரம், சென்ற வருடம் A பிரிவு ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட விருத்திமான் சஹா இந்த வருடம் C பிரிவுக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக அணியில் இடம்பெறாத மனிஷ் பாண்டேவுக்கு C பிரிவு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை, மிதாலி ராஜ், ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிரிதி மந்தனா, பூனம் யாதவ் ஆகியோர் A பிரிவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.50 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க